சிவகங்கையில் 7வது முறையாக போட்டியிடும் ப.சிதம்பரம்
தந்தை பெயர் பழனியப்பன். தாயார் பெயர் லட்சுமி ஆச்சி. 1945ம் ஆண்டு பிறந்தார். சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் கிராமம்.
நளினி சிதம்பரம் என்ற மனைவியும், கார்த்தி என்ற மகனும் உள்ளனர்.
பி.எஸ்.சி, பி.எல்., எம்.பி.ஏ படித்தவர். நாட்டின் தலை சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவராகவும், பொருளாதார மேதைகளில் ஒருவராகவும் வர்ணிக்கப்படுபவர்.
சென்னை பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றுள்ளார்.
1972ம் ஆண்டு காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினராக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக 1973 முதல் 76 வரை பணியாற்றினார்.
தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளராக 76 முதல் ஓராண்டு பதவி வகித்தார்.
1984ம் ஆண்டு முதல் முறையாக லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1985ம் ஆண்டு மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார்.
85 முதல் 86 வரை மத்திய நிர்வாக சீர்திருத்தத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றினார்.
86 முதல் 89 வரை பெர்சனல், ஓய்வூதியம், பொது குறை தீர்ப்புத் துறை இணை அமைச்சராக பதவி வகித்தார்.
அதே காலகட்டத்தில் உள்துறை இணை அமைச்சர் பதவியையும் வகித்தார்.
1989ம் ஆண்டு 2ம் முறையாக லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1991ம் ஆண்டு 3வது முறையாக எம்.பி. ஆனார்.
1991 முதல் 92 வரையிலும், பின்னர் 95 முதல் 96 வரையிலும் மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார்.
1996ம் ஆண்டு நான்காவது முறையாக லோக்சபா உறுப்பினர் ஆனார். இம்முறை தமாகா சார்பில் வென்றார்.
96-98ல் நிதித்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார். கூடுதலாக சட்டம், நீதி மற்றும் கம்பெனி விவகாரத்துறைகளையும் கவனித்தார். 97 முதல் கம்பெனி விவகாரத்துறையை கவனித்தார்.
1998ம் ஆண்டு ஐந்தாவது முறையாக லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறையும் தமாகா சார்பில் வென்றார்.
1999ம் ஆண்டு சுதர்சன நாச்சியப்பனிடம் தோற்றார்.
மீண்டும் காங்கிரஸில் இணைந்த பின்னர் நடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் ஆறாவது முறையாக லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004ம் ஆண்டு மே 23 முதல் 2008 நவம்பர் வரை நிதியமைச்சராகவும், 2008 டிசம்பர் 1ம் தேதி முதல் உள்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார்.
இந்தியாவின் சிறந்த அமைச்சர்களில் ஒருவராக விளங்கி வரும் ப.சிதம்பரம் எந்தவிதமான பெரிய சர்ச்சைககளிலும் இதுவரை சிக்காதவர். கொடுத்த பொறுப்பை செம்மையாக நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துபவர்.
எந்தவிதமான புகாருக்கும் ஆணித்தரமாக, தக்க புள்ளி விவரங்களுடன் பதில் அளிப்பவர். சிறந்த, திறமையான நிர்வாகியாக அறியப்பட்டவர்.
மூப்பனாரின் தீவிர சிஷ்யர்களில் ஒருவர். இடையில் காங்கிரஸ் உடைந்து தமாகா உருவானபோது அதில் முக்கியப் பங்காற்றினார். அதே மூப்பனாருடன் மனஸ்தாபம் ஏற்பட்டபோது, புதிய அமைப்பை உருவாக்கி இயங்கி வந்தார். பின்னர் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
தற்போது 7வது முறையாக சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார் சிதம்பரம். இம்முறை அவர் சற்று கடுமையான வேட்பாளரை எதிர்கொள்கிறார்.
அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜ. கண்ணப்பன், சிதம்பரத்திற்கு கடும் போட்டியைக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவேதான் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பே பிரசாரத்தைத் தொடங்கி விட்டார் ப.சிதம்பரம்.
சிவகங்கைச் சீமையை ஏழாவது முறையாக வெல்வாரா சிதம்பரம், அதை தடுப்பாரா ராஜ. கண்ணப்பன் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.