சாமியார் கடத்தவில்லை-கொடை மாணவி வாக்குமூலம்
தாராபுரம்: என்னை யாரும் கடத்தவில்லை என்று கூறி கொடைக்கானல் சாமியாரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கல்லூரி மாணவி தாராபுரம் கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் புளியமரத்து செட் என்னும் ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இதன் அருகில் ஆசிரமம் வைத்திருப்பவர் அசோக்ஜி என்ற சாமியார்.
இந்த மடத்திற்கு அருகில் பெட்டிக் கடை வைத்துள்ளால் செல்வம். இவரது மகள் ராகசுதா. 19 வயதான ராகசுதா கல்லூரியில் படித்து வருகிறார்.
அசோக்ஜி அடிக்கடி செல்வம் வீட்டுக்குப் போவாராம். அப்போது ராகசுதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ராகசுதா காணாமல் போய் விட்டார்.
இதையடுத்து அசோக்ஜிதான் தனது மகளை கடத்திக் கொண்டு போய் விட்டதாக போலீஸில் புகார் கொடுத்தார் செல்வம்.
இதையடுத்து ராகசுதாவையும், அசோக்ஜியையும் போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், ராகசுதா தாராபுரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வந்தார். மாஜிஸ்திரேட்டு சந்திரனிடம் (பொறுப்பு) கோர்ட்டில் சரணடைவதாக கூறி மனு கொடுத்தார்.
மனுவை பெற்ற மாஜிஸ்திரேட்டு சந்திரன் (பொறுப்பு), இந்த சரண்டர் மனுவில் கொடைக்கானல் போலீசார் வழக்குபதிவு செய்த நகல் இணைக்கப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளதா, இல்லையா என்றும் தெரியவில்லை. எனவே இளம்பெண் ராகசுதாவின் சரண்டரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.
இதையடுத்து நேற்று காலை மாணவி ராகசுதா, வக்கீல் சேகர் மூலம் தாராபுரம் போலீஸ் டி.எஸ்.பி. மறைமலை முன் சரணடைந்தார்.
என் தந்தையால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். என்னை யாரும் கடத்தவில்லை. என் தந்தையின் தொந்தரவை தாங்க முடியாமல் தான் வீட்டைவிட்டு வெளியே வந்தேன் என்று கூறியுள்ளார் ராகசுதா.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொடைக்கானல் போலீசில் உள்ளதாலும், கொடைக்கானல் சரக போலீஸ்தான் பாதுகாப்பு கொடுக்க முடியும் என்பதாலும் நாங்கள் பாதுகாப்பு வழங்கமுடியாது அவரிடம் டி.எஸ்.பி. மறைமலை கூறி விட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் ராகசுதா பேசுகையில், எங்கள் குடும்பத்துக்கும் அசோக்ஜிக்கும் கடந்த 16 வருடமாக பழக்கம் உண்டு. இதன் காரணமாக அவர் அடிக்கடி எங்களது வீட்டுக்கு வருவார். அதுபோன்று நாங்களும் அடிக்கடி அவரது வீட்டுக்கு செல்வோம்.
என் தந்தை, பெண் பிள்ளைகள் படிக்கக் கூடாது; ஆண் பிள்ளைகள்தான் படிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர். இதன் காரணமாக என்னை 10-ம் வகுப்புக்கு மேல் படிக்கக் கூடாது என்று கூறினார்.
இந்த நிலையில், அசோக்ஜி பலருக்கு உதவி செய்து வந்தார். அதனால் எனது படிப்புக்கு உதவி செய்யுமாறு அவரிடம் கேட்டேன். அதனால் அவர் என்னை படிக்க வைத்தார்.
நான் 12-ம் வகுப்பு முடித்த பின்பு பி.சி.ஏ. படிக்க விரும்பினேன். எனது விருப்பத்தை தந்தையிடம் கூறினேன். அவர் நீ படிக்கவே கூடாது என்று சொல்லி என்னை துன்புறுத்தினார்.
படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால், நான் அசோக்ஜியிடம் சென்று என்னை பி.சி.ஏ. படிக்க வைக்குமாறு கூறினேன். அவரும் நான் பி.சி.ஏ. படிக்க அனைத்து உதவிகளும் செய்தார். தற்போது நான் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்.
எனது படிப்புக்கு அசோக்ஜி உதவி செய்து வருவதும், நான் படித்து வருவதும் என் தந்தைக்கு பிடிக்கவில்லை. இதனால் கடந்த வாரம் நான் படித்து வரும் கல்லூரிக்கு வந்து, மாணவிகள் முன் என்னை அடித்து உதைத்தார்.
இதனால் எனக்கு அவமானமாகப் போய் விட்டது. இதையடுத்து நான் வீட்டை விட்டு வெளியேறினேன். இதனால் கோபமடைந்த எனது தந்தை அசோக்ஜி கடத்தி சென்று திருமணம் செய்துவிட்டதாக என் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
என்னை அசோக்ஜி கடத்தவும் இல்லை; திருமணம் செய்யவும் இல்லை. வீட்டில் என் தந்தை என்னை கொடுமை படுத்தியதால்தான் நான் வீட்டைவிட்டு வெளியே வந்து இருக்கிறேன்.
இனிமேல் நான் எனது வீட்டுக்கு செல்ல மாட்டேன். ஏதாவது ஒரு காப்பகத்தில் தங்கியிருந்து பி.சி.ஏ. படிப்பை முடிக்கப் போகிறேன். ஐ.ஏ.எஸ். அதிகாரியாவதுதான் எனது லட்சியம் என்றார்.
ராகசுதா, கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.