பிரிட்டன்-பிரான்ஸ் அமைச்சர்கள் பேச்சு 'வீண்': இறங்கி வராத இலங்கை
இன்று காலை இங்கிலாந்தின் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸின் பெர்னார்ட் கொச்னார் ஆகியோர் கொழும்பு வந்தனர். முதலில் வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமாவை இருவரும் சந்தித்தனர்.
இந்த சந்திப்பு தோல்வியில் முடிவடைந்தது. இதுகுரித்து கொச்னார் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் மிகக் கடுமையாக போராடினோம். இலங்கை அமைச்சரிடம் போரை முழுமையாக நிறுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதாபிமான குழுவை அனுப்ப வேண்டும் என தீவிரமாக வலியுறுத்தினோம். எத்தனை வலியுறுத்தியும் அவர் கேட்கவில்லை. இதற்கு மேல் என்ன செய்வது என்பதை இலங்கையிடமே விட்டு விடுகிறோம் என்றார்.
மிலிபான்ட் கூறுகையில், பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. அப்பாவி மக்களை காப்பாற்றத்தான் தற்போது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற முடிவெடுத்துள்ளோம். விடுதலைப் புலிகளுக்காக இதை செய்யவில்லை என்று பொகல்லகாமா தெரிவித்தார் என்றார்.
அதிபர் ராஜபக்சேவையும் இரு அமைச்சர்களும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
மேலும், வவுனியாவில் உள்ள இடம் பெயர்ந்த தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களையும் அவர்கள் பார்வையிடவுள்ளனர். அங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தனது பயணத்தின்போது, மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க இலங்கை அரசு முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். புலிகள் பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்க வேண்டும். அவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என ராஜபக்சேவை கோரவுள்ளதாக ஏற்கனவே மிலிபான்ட் தெரிவித்துள்ளார்.
மேலும், முகாம்களில் தங்கியுள்ளழர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள், உணவு, உடை உள்ளிட்டவற்றை வழங்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில்தான் ஜான் ஹோம்ஸ் வந்து சென்றார். தற்போது இங்கிலாந்து, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் வந்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து வருவதாக இருந்த ஸ்வீடன் அமைச்சரின் வருகைக்கு இலங்கை அரசு தடை போட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வாரங்களாக இலங்கைக்கு சர்வதேச நாடுகளின் நெருக்கடி அதிகரித்து விட்டது. ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து இலங்கையை நிர்ப்பந்தித்து வருகின்றன. ஆனால் யார் சொல்லியும் தமிழர்கள் மீதான தாக்குதலை இலங்கை நிறுத்தவில்லை.
இப்போதும் கூட கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என இலங்கை கூறியுள்ள போதிலும் கூட அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதல் முழுமையாக நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு ஐ.நா. கண்டனம்:
அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று திரும்பத் திரும்பக் கோரியும், அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை பீரங்கிக் குண்டுத் தாக்குதலை நடத்தி வருவதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.
நேற்று பாதுகாப்பு வளையப் பகுதியில் பல மணி நேரம் நடந்த பீரங்கித் தாக்குதலையும் அது கண்டித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. மனிதாபிமான பிரிவு உதவிச் செயலாளர் ஜான் ஹோம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து அப்பாவி மக்கள் வசி்க்கும் பகுதிகளில் பீரங்கித் தாக்குதல் நடைபெறுவதாக எனக்கு தகவல் வந்துள்ளது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இதற்கு முன்பு தான் கூறியதை இலங்கை அரசும், படைகளும் கடைப்பிடிக்கவில்லை. ஆனால் அதிபரே கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம என்று கூறியுள்ளதால் இம்முறை இலங்கை தனது சொல்லைக் காக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா இதை மறுத்துள்ளார். நாங்கள் பெரிய ஆயுதங்கள் எதையும் பயன்படுத்தவில்லை. சிறிய ரக ஆயுதங்களைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.
விடுதலைப் புலிகள் வசம் இருந்த ஒரு அரண் பகுதியை நாங்கள் உடைத்து அந்த வழியாக அப்பாவிகள் வெளியேறுவற்கு வகை செய்தோம் என்றார்.