ஆர்பி சவுத்ரிக்கு இப்படியா நிலைமை வரணும்? அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? கவிஞர் வைரமுத்து உருக்கம்
சென்னை: தமிழ் திரையுலகை உலுக்கிய தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி மறைவு குறித்து தொடர்ந்து பலரும் உருக்கமாக நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு, சினிமா ரசிகர்களையும் கலைஞர்களையும் ஆழமாக பாதித்துள்ளது.

வைரமுத்துவின் இரங்கல் பதிவு
கவிஞர் வைரமுத்து தனது உருக்கமான பதிவில், "அய்யகோ மெய்யாகவா அமுதசுரபி
உடைந்துவிட்டதே என்று
உடைந்து போனேன்
நான் கவியாடிய
கலை வீடுகளுள் ஒன்று
சூப்பர் குட் பிலிம்ஸ்
துள்ளாத மனமும் துள்ளும்
நாட்டாமை, ஷாஜகான்,
ஆசை ஆசையாய், தித்திக்குதே,
கேப்டன், ஜில்லா போன்ற முத்திரைப்படங்களின்
முன்னணித் தயாரிப்பாளர்
சௌத்ரி
புதுமை விரும்பி;
இளம் இயக்குநர்களின்
நலம் விரும்பி
சாதிக்கப் பிறந்த
ஆதிக்க வாதி
அவர்
சாலைவிபத்தில் மறைந்ததில்
என் விலாஎலும்பு வலிக்கிறது
என் அருமை நண்பரை
இழந்துவிட்டேன்
அவர் கொடுத்த காசோலை
எதுவும் திரும்பியதில்லை
அந்த வரிசையில்
அவரும் இப்போது
திரும்பப் போவதில்லை
அவரை இழந்து வாடும்
குடும்பத்திற்கும்
கலைத்துறைக்கும்
கலங்கிய கண்களோடு
இரங்கல் தெரிவிக்கிறேன்
உங்கள் கலைப் புகழ்
அழியாது சௌத்ரி
மரணம் உங்களுக்கு
மறைவு இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது.
சினிமாவை வடிவமைத்த சாதனையாளர்
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல தலைமுறைகளின் ரசனையை வடிவமைத்தவர் ஆர்.பி. சவுத்ரி. விஜய் நடித்த 'பூவே உனக்காக', 'ஜில்லா', 'லவ் டுடே' போன்ற படங்கள் அவரது தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றன.
அதேபோல் அஜித் குமார் நடித்த 'ராஜா', 'உன்னைக் கொடு என்னை தருவேன்' போன்ற படங்களும் அவரது தயாரிப்பின் அடையாளமாக திகழ்கின்றன. 'நாட்டாமை', 'சூர்ய வம்சம்', 'துள்ளாத மனமும் துள்ளும்' போன்ற படங்கள் இன்று வரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளன.
கலைஞர்களின் வாழ்வை மாற்றியவர்
ஆர்.பி. சவுத்ரி, வெறும் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் பலரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியவர்.
இயக்குநர் விக்ரமன் உள்ளிட்ட பலர், தங்களின் ஆரம்ப காலத்தில் அவர் கொடுத்த வாய்ப்பை மறக்க முடியாது என்று கூறியுள்ளனர்.
புதிய இயக்குநர்களை நம்பி அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் தன்மை, அவரை மற்ற தயாரிப்பாளர்களிலிருந்து வேறுபடுத்தியது. அதனால் தான் அவர் பல தலைமுறைகளால் மதிக்கப்பட்டார்.
நிறைவேறாத கனவு
தனது 100வது படத்தை விஜய் வைத்து தயாரிக்க வேண்டும் என்பது சவுத்ரியின் நீண்டநாள் ஆசை.
ஆனால் விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபட்டதால் அந்த கனவு நிறைவேறவில்லை.
இந்த தகவல் தற்போது மீண்டும் பேசப்பட்டு, "அந்த ஆசை நிறைவேறியிருக்க வேண்டும்" என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
மறையாத பெயர்
ஆர்.பி. சவுத்ரி மறைந்தாலும், அவர் உருவாக்கிய படைப்புகள் மற்றும் வளர்த்த கலைஞர்கள் மூலம் அவர் என்றும் வாழ்ந்துகொண்டே இருப்பார். கவிஞர் வைரமுத்து கூறியதுபோல், "மரணம் உங்களுக்கு மறைவு இல்லை" என்ற வரி, அவரது வாழ்க்கையின் உண்மையான சுருக்கமாகவே பார்க்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications