ஈழம்-பெங்களூரில் தமிழர்கள் பிரமாண்ட பேரணி
பெங்களூர்: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக பொய் பிரச்சாரம் செய்யும் இலங்கை அரசை கண்டித்தும், அங்கிருக்கும் ஈழத் தமிழர்களை காக்க கோரியும் நேற்று பெங்களூரில் தமிழர்கள் நடத்திய பிரமாண்ட பேரணி நடந்தது.
பெங்களூரில் கே.ஆர்.புரம் தாசில்தார் அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்ட்ட இந்த பேரணிக்கு நடுநிலை மனப்பான்மை பொதுமக்கள் சங்க தலைவர் ரவி பிரகாஷ் தலைமை தாங்கினார்.
உலக தமிழர் இளைஞர் வழிகாட்டும் தளம் அமைப்பின் தலைவர் கணேசன், பெங்களூர் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராசு மாறன, கர்நாடக தமிழர் கூட்டமைப்பு தலைவர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் தாசில்தார் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். பேரணியில் குழந்தைகள், பெண்கள் என தமிழர்கள் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர். அவர்கள் கையில் பிரபாகரன் படத்தை ஏந்தி சென்றனர்.
புலிகளுக்கு சிகிச்சை-கர்நாடக அரசு:
இந் நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா நேற்று பெங்களூரில் நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ளது. அதன் விளைவால் கர்நாடகத்தில் ஏற்படும் பாதிப்பை தடுப்பது, மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றை நிலைநாட்டுவது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.
இலங்கையில் இருந்து காயமடைந்து வந்தவர்கள் யாரும் சிகிச்சை பெற வந்தால், அவர்கள் விடுதலைப் புலிகளாக இருந்தாலும் கூட அவர்களுக்கு மனித நேய அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும்.
சிகிச்சை பெறுபவர்கள் குறித்தும், புகலிடம் தேடி வருபவர்கள் குறித்தும் தீவிரமாக கண்காணிக்கும்படி போலீஸ் துறைக்கு உத்தரவிட்டுள்ளோம். அப்படி யாராவது வந்தால், அவர்கள் குறித்து உடனடியாக மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
தமிழ்நாடு அரசு ராமேஸ்வரம் உள்பட கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். நாங்களும், தமிழக அரசுடன் நிரந்தர தொடர்பில் உள்ளோம். கர்நாடகத்தில் யாரும் நுழைய வாய்ப்பு இல்லை. அதேபோல் கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார் ஆச்சார்யா.