புலிகளை வீழ்த்த பேருதவி - பாக். விமானப்படைக்கு இலங்கை நன்றி
இஸ்லாமாபாத்: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற பெரும் உதவிகளைச் செய்ததற்காக பாகிஸ்தான் விமானப்படைக்கு இலங்கை நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானுக்கான இலங்கை துணைத் தூதர் ஜெயலத் வீரக்கடி இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது பாகிஸ்தான் விமானப்படை, அனைத்து விதமான தொழில்நுட்ப மற்றும் பிற உதவிகளைச் செய்தது.
பாகிஸ்தான் விமானப்படையின் இந்த பேருதவியில், தொழில்நுட்ப உதவி, ஆயுத உதவி, பயிற்சி, சீன ரக போர் விமானங்களை இயக்குவதற்கான உதவி உள்ளிட்டவை அடங்கும்.
பாகிஸ்தானும், இலங்கையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தீவிரவாத மிரட்டலை சந்தித்து வந்தன. பின்னணியும், சூழ்நிலையும்தான் வேறு வேறாக உள்ளது.
தற்போது இலங்கை தனது தீவிரவாதத்திற்கு எதிரான போரில் வென்று விட்டது. இந்த அனுபவத்தை பிற நாடுகளுக்கும் சொல்லித் தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றியது முதலே இலங்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தனர். அவர்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து பெருமளவில் உதவிகள் கிடைத்ததே இதற்குக் காரணம்.
ஆனால் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமானப்படையின் சிறந்த பயிற்சி மற்றும் ஒத்துழைப்பால் புலிகள் இயக்கத்தை தோற்கடித்து விட்டோம் என்றார் அவர்.