திருச்செந்தூர் கோவில் சிலைகளை சீர்படுத்திய பின்னரே கும்பாபிஷேகம் - உயர்நீதிமன்றம்
திருச்செந்தூர் கோவில் சிலைகளை சீர்படுத்திய பின்னரே கும்பாபிஷேகம் - உயர்நீதிமன்றம்
மதுரை: திருச்செந்தூர் கோவிலில் பழுதடைந், சேதமடைந்த நிலையில் உள்ள சிலைகளை சீர்படுத்திய பின்னரே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்த சிதம்பரம் என்ற வேத ஆசிரியர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜுலை 2-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
கோவிலில் உள்ள மூலவர் விக்கிரகம் உள்பட கோவில் பிரகாரத்தில் உள்ள வீரபாகுமூர்த்தி, வீரமகேந்திரன், சண்டீகேசுவரர், 108 மகா தேவர், சத்குரு சம்ஹார மூர்த்தி ஆகிய சுவாமிகளின் விக்கிரகங்களும் சிதிலம் அடைந்துள்ளன. சிதிலங்களை சீர்படுத்தாமல் கும்பாபிஷேகம் நடத்துவது சரியல்ல.
இதனால் கும்பாபிஷேகத்துக்கு முன்பு அந்த சிதிலங்களை சரிப்படுத்த வேண்டும் என்று கோவில் நிர்வாகத்திடம் மனு கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விக்கிரகங்களின் சிதிலங்களை சீர் செய்யாமல் கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க வேண்டும். சிதிலங்களை சீர் செய்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ராமசுப்ரமணியன், அரி பரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
கோவில் நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தியாகராஜன், கோவில் மூலஸ்தானத்தில் கேரள தாந்திரிக முறைப்படி பூஜை நடத்தப்படுகிறது. பிற சன்னதிகளில் சிவ ஆகம விதிப்படி பூஜை நடத்தப்படுகிறது.
மூலவர் தவிர பிற சன்னதிகளில் சிதிலம் அடைந்துள்ள விக்கிரகங்கள் கும்பாபிஷேகத்துக்கு முன்பு சரி செய்யப்படும். மூலவர் விக்கிரகம் கும்பாபிஷேகம் முடிந்து 40 நாட்களில் சரி செய்யப்படும் என்றார்.
பின்னர் கோவில் தந்திரியான மலையாளியான சுப்பிரமணியரு மலையாளத்தில் பேசினார். அவர் கூறுகையில், கும்பாபிஷேகத்துக்கு முன்பு மூலவர் விக்கிரகத்தை சரி செய்ய வேண்டும் என்று விதி எதுவும் இல்லை. கும்பாபிஷேகத்துக்கு பிறகு மூலவர் விக்கிரகத்தை சரி செய்வதே நல்லது என்றார்.
வாதங்களைக் கேட்ட பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், காரண ஆகமத்தின் உப ஆகமமான குமாரதந்திரம் என்ற நூலில் 15-வது விதியின் ஜீரணோத்தரான படலத்தில் ஒரு கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தும் பட்சத்தில் அந்த கோவிலின் விக்கிரகங்கள் சிதிலம் அடைந்து இருந்தால் கும்பாபிஷேகத்துக்கு முன்பு சிதிலம் அடைந்த விக்கிரகங்களை சரி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதுசம்பந்தமாக கேரள தாந்திரிக முறையில் எந்த விதியும் இல்லை.
குமாரதந்திர நூலில் கூறி உள்ளது போன்று மூலவர் விக்கிரகம் உள்பட சிதிலம் அடைந்துள்ள அனைத்து விக்கிரகங்களையும் சீர் செய்து கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதன் மூலம் சிதிலமடைந்த சிலைகளை சீர்படுத்திய பின்னர்தான் கும்பாபிஷேகத்தை நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கும்பாபிஷேகத்திற்கு முன்பு சிலைகள் சீர்படுத்தப்படுமா அல்லது கும்பாபிஷேகம் தள்ளிப் போகுமா என்பது தெரியவில்லை.