பட்ஜெட்: லாலு போல சலுகை தருவாரா மம்தா?
கடந்த ஐந்து ஆண்டுகளாக ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் ஆண்டுதோறும் பயணிகளின் கட்டணத்தை ஏற்றாமலேயே ரயில்வே நிர்வாகத்தை கவனித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
ஆனால் தற்போது லாலு ரயில்வேயில் இல்லை. மமதா பானர்ஜி ரயில்வே அமைச்சராகியுள்ளார். லாலுவைப் போல மமதாவின் பட்ஜெட்டில் சலுகைகள் மழையாக பொழியாது என கூறப்படுகிறது.
இதற்கு லாலுவையே காரணம் காட்டுகிறார்கள் ரயில்வே அதிகாரிகள்.
கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் லாலு. அப்போது, ஏ.சி. வகுப்பு மற்றும் படுக்கை வசதி கொண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2 சதவீத கட்டணத்தை குறைத்தார்.
இதன் காரணமாக ரயில்வேக்கு ரூ. 3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.
மேலும், 6-வது ஊதியக் கமிஷனின் பரிந்துரை காரணமாக ஊழியர்களுக்கு கூடுதலாக ரூ.18 ஆயிரம் கோடி சம்பள பணம் ஒதுக்க வேண்டியது உள்ளது.
பென்சன் கொடுக்க வேண்டிய வகைக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டியதுள்ளது. இந்த நிலையில் லல்லு பிரசாத் ரெயில் கட்டணத்தை குறைத்தது, சிக்கலை ஏற்படுத்தி விட்டதாம்.
மேலும், கண்டெய்னர் போக்குவரத்தில் சமீப காலமாக கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வருமான குறியீட்டை ரெயில்வே துறையால் எட்ட முடியவில்லையாம். பொருளாதார மந்தமும் கூடவே சேர்ந்து கொள்ள ரயில்வேயின் வருவாய் குறைந்து விட்டதாம்.
பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாததால் வருவாயும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக மமதாவின் பட்ஜெட்டில் நிச்சயம் கட்டண உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், லாலுவைப் போல பெருமளவில் சலுகைகளும் இருக்காது எனவும் தெரிகிறது. இருப்பினும் கூட ஏழை, எளியவர்களுக்கான பட்ஜெட்டாக இது அமையும் என ஏற்கனவே மமதா கூறியுள்ளார். எனவே ஓரளவு சலுகைகள் இருக்கும் என தெரிகிறது.
ஜூலை 3ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜன்னல் ஓர படுக்கைகள் அகற்றம்
இதற்கிடையே, எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளின் கடும் அதிருப்தியை சம்பாதித்த ஜன்னலோர படுக்கை வசதி அகற்றப்படுகிறது. இதையொட்டி ஜூலை 13ம் தேதி முதல் இந்த படுக்கை வசதிக்கான முன்பதிவு நிறுத்தப்படுகிறது.
பயணிகள் நெருக்கடியை கருத்தில் கொண்டும், கூடுதல் பயணிகளை ரயிலில் அடைப்பதற்காகவும் குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை மற்றும் 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் ஜன்னல் ஓரங்களில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் நெல்லை, கோவை, முத்துநகர் ஆகிய ரயில்களில் ஜன்னல் ஓர படுக்கைகள் உள்ளன. இந்த ரயில்களில் ஒரு பெட்டியில் கூடுதலாக 9 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டன.
இதன் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் வருவாய் கிடைத்தது. ஆனால் இந்த ஜன்னல் ஓர கூடுதல் படுக்கையால் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.
இந்த கூடுதல் படுக்கை வசதியைப் பெறும் பயணிகளில் ஏறி படுத்துக் கொண்டுதான் செல்ல முடியும். உட்கார முடியாது.
மிகவும் அசவுகரியத்துடன், காசைக் கொடுத்தும் கஷ்டத்தை வாங்கிக் கொண்டு பயணம் செய்வதா என்று பயணிகள் குமுறல் வெளியிட்டிருந்தனர்.
இந்த படுக்கை வசதியே வேண்டாம், அகற்ற வேண்டும் என கோரிக்கைகள் குவிந்தன.
இதையடுத்து அந்த படுக்கைகள் விரைவில் அகற்றப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. எனினும் கோடை விடுமுறையில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் ஜூலை 12-ந்தேதிக்குள் அகற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஜன்னல் ஓரபடுக்கைகளை படிப்படியாக அகற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த படுக்கை வசதிக்கான முன்பதிவு ஜூலை 13ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறதாம்.