மக்களிடம் குறை கேளுங்கள் - கவுன்சிலர்களுக்கு முதல்வர் அறிவுரை
சென்னை: மாநகராட்சி கவுன்சிலர்கள் நடந்தே போய் மக்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர்களுக்கு முதல்வர் கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் 155 வார்டுகள் உள்ளன. இவற்றில் 92 வார்டுகளில் திமுக கவுன்சிலர்கள் உள்ளனர். மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடக்கிறது.
இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதி தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் கூட்டப்பட்டது.
தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நேற்று மாலை முதல்வர் கருணாநிதி தலைமையில் இந்தக் கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார் முதல்வர்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மேயர் சுப்பிரமணியன், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், வி.எஸ்.பாபு, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கவுன்சிலர்களிடையே முதல்வர் பேசுகையில்,
கவுன்சிலர்கள் அனைவரும் தினமும் காலையில் நடந்து சென்று மக்களிடம் குறைகள் கேளுங்கள். நாங்கள் எல்லாம் அந்த காலத்தில் அப்படிதான் நடந்துகொண்டோம்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் உழையுங்கள்'' என்று கவுன்சிலர்களுக்கு அறிவுரை வழங்கினார் கருணாநிதி.
உண்மையில், திமுக கவுன்சிலர்கள் மீது பல்வேறு புகார்கள் கட்சித் தலைமைக்கு வந்தபடி உள்ளதாக தெரிகிறது. இதையடுத்தே கவுன்சிலர்களைக் கூப்பிட்டு முதல்வர் கருணாநிதி அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.