குண்டக்க மண்டக்க மார்க்கைக் குறைத்த ஆசிரியர்கள்!
சென்னை: பிளஸ்டூ மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் சிலர் எந்த அளவுக்கு அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டுள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிளஸ்டூ, பத்தாம் வகுப்பு மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். அப்படி மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களின் விடைத்தாள்களில் இடம் பெற்ற மதிப்பெண்கள் மீண்டும் கூட்டப்பட்டு மதிப்பெண் தீர்மானிக்கப்படும்.
பொதுவாக இதுமாதிரியான மறு கூட்டலுக்குப் பின்னர் ஓரளவுக்கு மார்க் கூடக் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு மறு கூட்டலில் சில அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது பிளஸ்டூவில் ஒரு மாணவரின் கணிதத் தாளில் 92 மார்க் கூடுதலாக கிடைத்துள்ளது. அதாவது அந்த மாணவரின் உண்மையான மதிப்பெண் 176 ஆகும். ஆனால் விடைத்தாளைத் திருத்திய ஆசிரியர் கொடுத்த மதிப்பெண் வெறும் 84 தான்.
அந்த மாணவர் மிக நன்றாகப் படிக்க்க கூடியவர். ஆனால் 84 மதிப்பெண்களே கணிதத்தில் கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்து மறு கூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து விடைத்தாள் மீண்டும் மதிப்பீடு செய்து பார்க்கப்பட்டபோது படு கவனக்குறைவாக அந்த விடைத்தாளை ஆசிரியர் திருத்தியிருந்தது தெரிய வந்தது.
சில பக்கங்களை அவர் திருத்தவே இல்லை. மேலும் மதிப்பெண்களையும் சரியாக கூட்டவில்லை. இதனால்தான் 92 மதிப்பெண்கள் விட்டுப் போய் விட்டது.
இதேபோல பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கணிதத்தில் வெறும் 21 மார்க் மட்டுமே போடப்பட்டுள்ளது. அதாவது அவர் பெயிலாகி விட்டார். ஆனால், மறு கூட்டலின்போது மதிப்பீடு செய்தபோது அவருக்கு கூடுதலாக 50 மார்க் கிடைத்து அவர் முதல் வகுப்பில் தேறியுள்ளார்.
இதேபோல கிட்டத்தட்ட ஆயிரம் மாணவர்களுக்கு மேல் கணிசமான மதிப்பெண்கள் இதுபோல விடுபட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவருக்கும் பத்து மற்றும் பனிரெண்டாவது வகுப்பு தேர்வு என்பது கடலைத் தாண்டுவது போல. இதற்காக உயிரைக் கொடுத்து படிக்கிறார்கள். அவர்களுக்கு உறுதுணையாக பெற்றோர்களும் விடுப்பு எடுத்துக் கொண்டு கூடவே அமர்ந்து பிள்ளைகள் கவனத்துடன் படிக்க ஆதரவாக இருக்கிறார்கள்.
ஆனால் இப்படிக் கஷ்டப்பட்டு படித்து எடுக்கும் மதிப்பெண்களை ஆசிரியர்கள் இவ்வளவு மோசமாக திருத்தி தள்ளுவது என்பது மிகக் கொடுமையானது. இதுபோன்ற ஆசிரியர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் குமுறுகின்றனர்.












Click it and Unblock the Notifications