மதுரை ரிங்ரோட்டில் காரை வழிமறித்து போலீஸ் உடையில் கொள்ளை!
மதுரை: மதுரை அருகே ரிங்ரோட்டில் வந்த காரை போலீஸ் உடையில் வழி மறித்த கொள்ளையர்கள் அதில் இருந்தவர்களிடம் ரூ. 9.22 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பொருள்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ஆனால், இது குறித்து காரில் வந்தவர்கள் தந்த புகாரை வாங்காத நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அவர்களை அலைய விட்டு தங்களது மட்டமான புத்தியைக் காட்டியுள்ளனர்.
சென்னை போரூர் சபரிநகரைச் சேர்ந்த தமிழ்செல்வன் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். இவர் தனது உறவினர்களான லிங்கராஜ் (40), கெளவுதம், மணிமேகலை, தமிழரசி, தமிழ்மணி, கெளதமி ஆகியோருடன் 3ம் தேதி ஒரு இனோவா காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தூத்துக்குடியில் உள்ள லிங்கராஜின் தங்கை வீட்டுக்குச் சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு சென்னை புறப்பட்டனர். காரை டிரைவர் மோகன் ஓட்டினார். நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கார் மதுரை ரிங் ரோடு கருவேலம்பட்டி பிரிவு அருகே வந்தபோது 4 பேர் காரை வழிமறித்தனர். இதில் 3 பேர் போலீஸ் உடையில் இருந்தனர். இன்னொருவன் சாதாரண உடையில் இருந்தான்.
தாங்கள் போலீஸ் அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு, லைசென்ஸ் மற்றும் சுற்றுலா உரிமை இருக்கிறதா என்று கேட்டவாறு கத்தி, அரிவாள்களைக் காட்டி காரில் இருந்த அனைவரையும் கீழே இறங்குமாறு மிரட்டினர்.
அவர்கள் மறுக்கவே அவர்களைத் தாக்கி காரிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துப் போட்டனர்.
அவர்கள் சாலையோரத்தில் இருட்டான பகுதிக்குள் இழுத்துச் சென்று நகைகளைப் பறித்தனர். மொத்தம் 31 பவுன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு காரில் இருந்த வீடியோ கேமரா, டிஜிட்டல் கேமரா, 7 செல்போன்கள் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டனர்.
பின்னர் 2 பேர் அந்த காரை கடத்திச் சென்றனர். மற்ற இருவர் மறைவில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
நடுரோட்டில் நள்ளிரவில் செய்வதறியாமல் தவித்த அவர்கள் அந்த வழியாக வந்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசாரின் ஜீப்பை நிறுத்தி கொள்ளை சம்பவம் குறித்து முறையிட்டனர். ஆனால் அவர்கள் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்குமாறு கூறிவிட்டுச் சென்று விட்டனர்.
(இத்தனைக்கும் இந்த போலீசாருக்கு ஒரு ஜீப்பும், டீசலும், இரவுப் பணிக்கான படிக்காசும் அளக்கிறது தமிழக அரசு. இவர்களுக்கு லாரிகளை நிறுத்தி பணம் கறப்பது, ரோட்டோர புரோட்டா கடைகளில் ஓசியில் தின்றுவிட்டு காசு வாங்குவது முக்கியமான வேலையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.)
இதையடுத்து அந்தத் குடும்பத்தினர் அந்த வழியே வந்த இன்னொரு காரில் ஏறி திருநகர் வந்து போலீசில் புகார் செய்தனர்.
இதற்கிடையே கொள்ளையர்கள் கடத்திச்சென்ற கார் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டி பஸ் நிறுத்தம் அருகே முன்பக்க டயர் பஞ்சர் ஆன நிலையில் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது.
கார் பஞ்சர் ஆனதால் அதை அந்த இடத்திலேயே விட்டு விட்டு கொள்ளையடித்த நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளது அந்தக் கும்பல்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்ப நாயும் கொண்டுவரப்பட்டது. அது கார் நின்று இருந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி திருநகர் 2வது பஸ் நிறுத்தம் அருகே போய் நின்றது.
இது குறித்து அறிந்த மதுரை எஸ்பி மனோகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். அவர் கூறுகையில், காரை வழிமறித்து போலீஸ் உடையில் வந்து கொள்ளையடித்த கொள்ளையர்கள் பற்றி தடயங்கள் சிக்கி உள்ளன. அதை வைத்து துப்பு துலக்கி விரைவில் பிடித்துவிடுவோம். கொள்ளை நடந்த சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ள போதும், அவர்கள் கடமையை மறந்து தட்டிக் கழித்துள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
டிக்கி'யில் இருந்ததால் தப்பிய. 30 பவுன் நகைகள்:
காரின் டிக்கியில் ஒரு சூட்கேஸ் இருந்தது. அதில் 30 பவுன் தங்க நகைகள், வைர நகைகள் இருந்தது. கொள்ளையர்கள் அதை பார்க்காததாலும் கார் பஞ்சர் ஆனதாலும் அந்த நகைகள் தப்பியுள்ளன.