செய்வினை கழிப்பதாக 65 பவுன் நகை, ரூ.25 லட்சம் மோசடி
நாகர்கோவில்: செய்வினையை நீக்குவதாக கூறி நாகர்கோவிலை சேர்ந்த பெண்ணிடம் 65 பவுன் நகை மற்றும் 25 லட்ச ரூபாய் மோசடி செய்த பாபநாசம் பொதிகையடியை சேர்ந்த மாந்தீரிக தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த பரபரப்பான சம்பவம் குறித்து மதுரையை சேர்ந்த அன்னலெட்சுமி என்பவர் விகேபுரம் போலீசில் கொடுத்துள்ள புகார்...
நானும் எனது கணவர் அய்யாபழமும், நாகர்கோவிலில் வடலிவிளையில் வசி்தது வந்தோம். என் கணவர் செட்டிகுளத்தில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2007ம் ஆண்டு பாபநாசத்தில் உள்ள மாவட்ட சாரணர் மையத்தில் ஆசிரியர்களுக்கான கூட்டம் நடந்தது.
அதில் பங்கேற்க வந்த எனது கணவர் அய்யாபழம் அருகில் இருந்த நாராயணசாமி கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். அப்போது அங்கிருந்த சுவேஷமுத்து மற்றும் அவரது மனைவி ராமலெட்சுமி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.
அந்த தம்பதியினர் நாராயணசாமி கோயிலில் வழிபட்டு குறி சொல்லி வந்தனர். எனது கணவருக்கும் அவ்வப்போது குறி சொல்லி பணம் பெற்று வந்தனர். இந்நிலையில் எனது கணவர் 25-12-2007ல் இறந்துவிட்டார்.
இதையடுத்து நாகர்கோவில் வடலிவிளையில் வசித்த எனது வீட்டிற்கு குறி சொல்லும் தம்பதியினர் துக்கம் கேட்டு வந்தனர். அப்போது உங்கள் வீட்டிற்கு யாரோ செய்வினை வைத்துள்ளனர். அதனால்தான் உங்கள் கணவர் இறந்து விட்டார். செய்வினை நீக்கும் பொருட்டு விசேஷ பூஜை செய்ய வேண்டியுள்ளது என்று கூறினார்.
நானும் அதை நம்பி அவர்களுக்கு பணம் கொடுத்தேன். கடந்த 2008ம் ஆண்டில் பல முறை பணமாக ரூ.25 லட்சமும், 65 பவுன் நகையும் கொடுத்துள்ளேன். அதனை பூஜை அறையில் வைத்து பூஜை செய்வதாக கூறி வாங்கி சென்றனர்.
பணம், நகை வைத்து பூஜை செய்தால் செய்வினை நீக்கி கூடுதலாக பணம், நகை கிடைக்கும் என்று கூறி சென்ற அவர்கள் பல மாதமாகியும், பணம், நகையை திருப்பித் தரவில்லை.
இதையடுத்து பணம், நகையை திருப்பி கேட்டதற்கு பூஜை செய்யும்போது சாமி எடுத்துக் கொண்டது, அதனால் பணம், நகையை திரும்ப தர முடியாது. வேண்டுமானால் அந்த கோவிலை உங்கள் பெயருக்கு எழுகி தருகிறேன். மீறி இதனை வெளியே சென்னால் உன் குடும்பத்தில் உள்ளவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள் என்று கூறி மிரட்டுகின்றனர்.
தற்போது குறி சொல்லும் அந்த மாந்திரிக சாமியார் டாடா இன்டிகா, ஸ்கார்பியோ காரில் வலம் வருகிறார். அவரிடமிருந்து பணம், நகையை மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்தப் புகாரைப் பதிவு செய்த போலீஸார் மாந்திரீக தம்பதியைத் தேடி வருகின்றனர்.