குற்றாலம்-குடிபோதையில் பயணிகள் மோதல்!
தென்காசி: குற்றாலத்தில் குடிபோதையில் வந்த ஒரு கும்பலால் பெரும் தகராறு ஏற்பட்டது
குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ளதை தொடர்ந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். பழைய குற்றாலம் அருவிக்கு செல்லும் வழியில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வாகனங்கள் நிறுத்தப்படும். அதனை மீறி சுற்றுலா பயணிகள் வாகனங்களில் செல்கின்றனர்.
அங்கு நிற்கும் போலீசார் தடுத்தால் அவர்கள் ஏதாவது எம்பி, எம்எல்ஏக்களின் பெயரை கூறியும், அவர்களுடைய உறவினர்கள் நாங்கள் என்றும் சொல்வதால் போலீசார் அவர்களை விட்டு விடுகின்றனர்..
இதனால் போலீசார் தங்களது பணியை திறம்பட செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதுரையை சேர்ந்த ஒரு கும்பல் போலீசாரிடம் ஒரு விஐபியின் உறவினர் என்று கூறி பழைய குற்றால அருவிக்கு சென்றனர். அங்கு சென்றதும் மது அருந்தி விட்டு கும்மாளம் அடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கும் மற்றொரு ஊரை சேர்ந்த கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டது.
விஐபிக்களின் உறவினர்கள் என்பதால் போலீசார் இதனை தட்டி கேட்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து மதுரையை சேர்ந்த அந்தகும்பல் மது அருந்தியவாறே காரை ஓட்டி சென்று அங்கிருந்த ஒரு சுவரில் மோதினர்.
அவர்களின் அநாகரிகமான செயலால் சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. போலீசாரும் தங்கள் கடைமையை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.












Click it and Unblock the Notifications