சட்டீஸ்கர்: லத்தி போலீஸ்-ஏ.கே.47 நக்சலைட்கள்!
ராய்ப்பூர்: இந்தியாவின் மாவோயிஸ்ட் நாடாக மாறி வருகிறது சட்டீஸ்கர். அந்த அளவுக்கு அங்கு நக்சலைட்கள் அதி நவீன ஆயுதங்கள் சகிதம் வலுவாகி வருகிறார்கள். ஆனால் போலீஸாரோ இன்னும் லத்திகளுடன்தான் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்களாம்.
நக்சலைட்கள் அதி நவீன ஆயுதங்களுடன் உலா வரும்போது அவர்களை எதிர்த்துப் போராட ஒரு நவீன ஆயுதத்தையும் தராத மாநில அரசின் மீது போலீஸார் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
வெறும் லத்தியுடன் மோதி, உயிரை இழப்பதற்குப் பதில் வேலையே போனால் கூட பரவாயில்லை என்ற மன நிலைக்கு அவர்கள் வந்துள்ளனர். இதனால் நக்சலைட் வேட்டைக்கு போகவே போலீஸார் தயங்குகிறார்களாம்.
அதையும் மீறி நக்சலைட்கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளுக்கு பணியமர்த்தப்படும் போலீஸாரும் சரி, அதிகாரிகளும் சரி தங்களது உயிரைக் காக்க நக்சலைட்டுகளுடன் அமைதியாகப் போய் விடுகின்றனராம். இதனால் இன்று சத்தம் இல்லாமல் கிட்டத்தட்ட சட்டீஸ்கர் முழுவதும் மாவோயிஸ்டுகளின் கரம் வலுவடைந்துள்ளதாம்.
இதுகுறித்து கடந்த 15 வருடங்களாக மாவோயிஸ்டுகள் பகுதியில் பணியாற்றி வரும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நக்சலைட்டுகளை ஒடுக்க அரசு விரும்புகிறது. ஆனால் அதற்கேற்றார் போன்ற செயல் திறமையும், திட்டமிடலும் அரசிடம் இல்லை.
இதனால் காவல்துறையினர் சலிப்படைந்து போய் விட்டனர். இதனால்தான் மாவோயிஸ்டுகள் உள்ள பகுதியில் பணியாற்றும் போலீஸார், அவர்களுடன் அனுசரித்துப் போய் விடுகிறார்கள் என்கிறார்.
இதை விட கொடுமை, மாவோயிஸ்ட் பகுதிகளில் உள்ள போலீஸார், தினசரி உள்ளூர் மாவோ தலைவர்களை போய்ப் பார்த்து சல்யூட் வைத்து விட்டு வருகிறார்களாம். இல்லாவிட்டால் உயிர் அவர்களிடம் இருக்காதாம்.
மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் பணிக்காக 38 ஆயிரம் போலீஸார் மற்றும் புற ராணுவப் படையினரை சட்டீஸ்கர் அரசு பயன்படுத்தி வருகிறது. அதேசமயம், மாவோயிஸ்டுகள் வசம் 15 ஆயிரம் பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனராம்.
இதில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் போலீஸாருக்கு மேல் நவீன ஆயுதங்கள் எதுவும் இல்லாதவர்கள். அவர்களிடம் உள்ள ஒரே ஆயுதம் லத்திதானாம். இவர்களைத்தான் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் நிறுத்தி வைத்திருக்கிறது சட்டீஸ்கர் அரசு.
ஆனால் மாவோயிஸ்டுகளோ, ஏ.கே.47, மார்ட்டர்கள், ராக்கெட் லாஞ்சர்கள் என எங்கேயோ போய்க் கொண்டுள்ளனர்.
சில போலீஸாரிடம் தானியங்கித் துப்பாக்கிகள், பிஸ்டல்கள் என சாதாரண ஆயுதங்கள் உள்ளனவாம். ஆனால் ஏகே.47 முன்பு இவை எம்மாத்திரம்.
சிஆர்பிஎப் வீரர்களிடம் ஏ.கே. 47 துப்பாக்கிகள் இருந்தாலும், அவர்களிடம் உள்ள பிரச்சினை என்னவென்றால், தங்களது முகாமுக்கு வெளியே சில கிலோமீடடர் தொலைவுக்கு மட்டுமே அவர்கள் போவார்களாம். அதைத் தாண்டி போக மாட்டார்களாம்.
சட்டீஸ்கரில் உள்ள 18 மாவட்டங்களிலும் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் வலுவாக உள்ளதாக கூறப்படுகிறது. காவல்துறையை சரிவர பயன்படுத்தி இவர்களை ஒடுக்காவிட்டால் இந்தியாவுக்குள் அமையும் முதல் மாவோயிஸ்ட் நாடு சட்டீஸ்கர் என்ற பெரும் பயங்கரம் நிகழக் கூடும் என எச்சரிக்கிறார்கள் மாவோயிஸ்டுகள் குறித்து நன்கு அறிந்து வைத்திருக்கும் காவல்துறை அதிகாரிகள்.