சுதந்திர தினம்: நாடு முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு
சென்னை: நாட்டின் 62வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி நாடு முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் விமான நிலையங்கள், கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் கொடியேற்றி உரையாற்றவுள்ள டெல்லி செங்கோட்டையில் ராணுவத்தினரும் பாரா மிலிட்டரிப் படையினரும் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பகுதியின் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பாதுகாப்புப் பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளன.
அதே போல தமிழகத்திலும் பாதுகாப்பு பணிகளில் சுமார் 70,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, கோட்டையில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார்.
இது குறித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
தமிழகத்தில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டை மற்றும் அணைத்து மாவட்டங்களிலும் சுதந்திர விழா நடைபெறும் இடங்கள் ஆகியவை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும், வழிபாட்டு தலங்கள், தலைவர்களின் சிலைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், ஆகியவற்றில் 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கடும் சோதனைக்கு பின்னே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. லாட்ஜ்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாவட்ட எஸ்பி உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலோர காவல் படை மற்றும் கடற் படையினரின் உதவியுடன் சென்னை கடல் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம், துறைமுகம் போன்ற பகுதிகளும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார் ராதாகிருஷ்ணன்.
நான்கு அடுக்கு பாதுகாப்பு...
சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில்,
தலைமை செயலகம் நான்கு அடுக்கு பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. போக்குவரத்து பிரிவு போலீஸ், சட்டம் ஒழுங்கு போலீஸ், உளவுப்பிரிவு போலீஸ், தலைமை செயலக பாதுகாப்பு பிரிவு போலீஸ் ஆகியோர் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சுதந்திர தின விழாவை அடுத்து சென்னை காமராஜர் சாலை-ராஜாஜி சாலையில் அன்று காலை 6 மணி முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
தயார்நிலையில் கமாண்டோக்கள்...
சென்னையில் கமாண்டோ படை போலீசார்கள் தயார் நிலையில் வைக்கப்படுவார்கள். பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் ஈடுபடுவார்கள்.
401 பேர் கைது...
நேற்று முதல் இரவு நேர சோதனைகள், ரோந்துகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
கூடுதல் கமிஷனர் ரவி, இணை கமிஷனர் சேஷசாயி மற்றும் ரவிகுமார் தலைமையில் அனைத்து துணை போலீஸ் கமிஷனர், உதவி போலீஸ் கமிஷனர் மற்றும் போலீசார் சென்னை நகரம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையின் போது ரவுடிகள், பழைய குற்றவாளிகள் மற்றும் தலைமறைவாகி இருக்கும் குற்றவாளிகளை கைது செய்யவும், கண்டுபிடித்து விசாரணை நடத்தவும், நீதிமன்ற வாரண்ட்களை நிறைவேற்றவும், வாகன தணிக்கை செய்யவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
அவர்கள் சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு சோதனை செய்தனர். இதில் 3 பழைய குற்றவாளிகள், 23 நீதிமன்ற வாரண்ட் நிலுவையில் உள்ளவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 19 பேர்கள் மற்றம் ரவுடிகள் உட்பட 401 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், வாகன சோதனையின் போது 475 பேர் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் ராஜோந்திரன்.