பால் விலை உயர்வை திரும்ப பெற ஜெ கோரிக்கை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக அரசு முதல் முறையாக 6.3.2007 அன்று பாலின் விலை லிட்டருக்கு ரூ. 1.25 வீதம், ரூ. 12.59ல் இருந்து ரூ. 13.75 என்ற அளவிற்கு உயர்த்தியது.
இரண்டாவது முறையாக, 2008ம் ஆண்டு பாலின் விலை லிட்டருக்கு ரூ. 2 வீதம், அதாவது ரூ. 13.75லிருந்து ரூ. 15.75 காசாக உயர்த்தப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக லிட்டருக்கு ரூ. 2 வீதம் ரூ. 15.75 லிருந்து ரூ. 17.75 ஆக உயர்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வு மாதாந்திர அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். மாதாந்திர அட்டையில்லாமல் தினசரி ரொக்கமாக கொடுத்து வாங்குபவர்களுக்கு லிட்டருக்கு ரூ. 2.50 வீதம் ரூ. 18லிருந்து ரூ. 20 .50 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. நிலைப்படுத்திய பால், நிறை கொழுப்பு சத்து பால் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது குறைந்தபட்சம் ரூ. 2லிருந்து ரூ. 4 வரை பாலின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் இதர பால் பொருட்களின் விலைகள் அறிவிப்பு இல்லாமலேயே உயர்ந்து கொண்டிருக்கின்றன.
3 ஆண்டுகளில் ரூ. 5.25 உயர்த்தப்பட்டுள்ளது...
2001 முதல் 2006 வரையிலான என்னுடைய ஐந்தாண்டு கால ஆட்சியில் பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் அளவுக்குதான் உயர்த்தப்பட்டது. ஆனால் மூன்று ஆண்டுகளில் பாலின் விலை ரூ. 5.25 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை முறை பால் விலை உயரப்போகிறதோ!
எனது ஆட்சிக் காலத்தில் 2004ம் ஆண்டு பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை உயர்த்திக்கொடுக்கப்பட்டது. அதே சமயத்தில் நுகர்வோர் நலன் கருதி பாலின் விற்பனை விலை உயர்த்தப்படவில்லை.
இதன் காரணமாக, பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் என இருதரப்பினரும் பயன் அடைந்தனர். ஆனால் திமுக ஆட்சி காலத்தில் தொடர்ந்து நுகர்வோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
2009 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, அதாவது மூன்று மாதங்களுக்குள் அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் எண்ணை வகைகள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் பெருமளவு உயர்ந்து விட்டன. இந்த சூழ்நிலையில் பாலின் விலையை உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள இந்த சூழ்நிலையில் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை உயர்த்தியதை வரவேற்கும் அதே சமயத்தில் நுகர்வோர் நலன் கருதி பால் விலை உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுமாறு தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறேன்.
சுங்க வரியில் முறைகேடு...
தனியார் நிறுவனத்தால் அமைக்கப்படும் சாலைப் பகுதிகளை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களிடம் இருந்து உபயோகக் கட்டணம் சுங்க வரி வசூலிக்கப்படுவது வழக்கம். மத்திய அரசால் அமைக்கப்படும் சாலைகளுக்கு சுங்க வரி வசூலிப்பது கிடையாது. ஆனால், இது போன்ற அவல நிலை சில இடங்களில் நடக்கிறது.
பெங்களூரில் இருந்து நாமக்கல் வரை செல்லும் 248.625 கிமீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை 7 சேலம் வழியாக செல்கிறது. சேலம் மாவட்டம் தும்பிப்பாடியில் இருந்து குரங்குசாவடி வரையிலான 19.2 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையும், குரங்குச் சாவடியில் இருந்து சீலநாயக்கன்பட்டி வரையிலான 7.85 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலையும் முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியால் அமைக்கப்பட்டது.
சீலநாயக்கன்பட்டியில் இருந்து நாமக்கல் வரையிலான 41.575 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலையை மட்டும் தான் எம்விஆர் இன்ப்ராஸ்டச்சர் மற்றும் டோல் சாலை பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் கட்டுதல், இயக்குதல், மாற்றுதல் அடிப்படையில் அமைக்கப்பட்டது.
எனவே, இந்தப் பகுதியில் செல்லும் வாகனங்களிடம் இருந்து மட்டும் கட்டணம் வசூலிக்கும் உரிமை மேற்படி நிறுவனத்திற்கு உண்டு. மேலும், இதற்காக அமைக்கப்படும் சுங்க சாவடியும் சீலநாயக்கன்பட்டி-நாமக்கல் பகுதிக்கு உட்பட்டு தான் இருக்க வேண்டும்.
ஆனால், இவற்றை எல்லாம் மீறி, சாலைப் பணிகளும், பாலம் கட்டும் பணிகளும் இன்னமும் முடிவடையாத நிலையில், இந்தச் சாலைக்கு சம்பந்தமே இல்லாத இடமான ஓமலூர் சாலையில், அதாவது 191.8-வது கிலோ மீட்டரில் சுங்கச் சாவடியை அமைத்து, அந்த வழியாகச் செல்லும் வாகனங்களில் மேற்படி தனியார் நிறுவனம் கட்டணம் வசூலிப்பது விதிமுறைகளை மீறிய செயலாகும்.
தினமும் ரூ. 20 லட்சம்...
இவ்வாறு அனுமதித்ததன் காரணமாக மேற்படி நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு கூடுதலாக 15 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
26ம் தேதி போராட்டம்...
எனவே, ஓமலூர் சாலையில் தனியார் நிறுவனம் சுங்கச்சாவடி அமைக்க அனுமதி அளித்ததை கண்டித்தும், உடனடியாக அந்த சுங்கச்சாவடியை அங்கிருந்து அகற்றி, சீலநாயக்கன்பட்டி - நாமக்கல் பகுதிக்கு உட்பட்ட இடத்தில் அமைக்க வலியுறுத்தியும், அதிமுக சேலம் புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் 26ம் தேதி காலை 10 மணிக்கு, ஓமலூர் சுங்கச் சாவடி அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளர் செ.செம்மலை, எம்.பி., தலைமையிலும், சேலம் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சரவணன் முன்னிலையிலும் நடைபெறும் என அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.