இரண்டரை ஆண்டுகளில் 14 பெண்களை மணந்த நபர்!
மும்பை: மும்பை சேர்ந்த வாலிபர் ஒருவர் 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து ஒவ்வொருடன் தனி தனியான இடங்களில் 14 வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
மும்பையை சேர்ந்தவர் துஷார் வாக்மரே. ஏர் இந்தியா நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வரும் இவர் தனது பெயரை மாற்றி கொண்டு பெண்களை ஏமாற்றி வந்துள்ளார்.
இது குறித்து மும்பை துணை போலீஸ் கமிஷ்னர் வாத்கர் கூறுகையில்,
அந்த நபர் மீது ஐந்து மனைவிகள் புகார் கொடுத்துள்ளனர். மீதமுள்ள 9 பெண்களும் தங்களது மானம் போய்விடும் என புகார் தரவில்லை.
துஷார் கடந்த 2006ல் இணையத் தளம் ஒன்றின் மூலம் பெண் வேண்டும் என விண்ணப்பம் செய்தார். அதில் தனக்கும், தனது மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், வேலைக்கு செல்லும் பிராமண பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். அவர் பிராமண பெண்களை திருமணம் செய்வதற்காக தான் தனது பெயரை துஷார் பபத் என மாற்றி கொண்டுள்ளார். அந்த பெண்கள் விவாகரத்து ஆனவர்களாகவோ அல்லது விதவைகளாகவோ இருந்தாலும் பரவாயில்லை என குறிப்பிட்டார்.
இதையடுத்து அவரை ஏராளமான பெண்கள் தொடர்பு கொண்டனர். இப்படி தனக்கு வந்த வரன்களில் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மாப்பிள்ளை கிடைத்தால் போதும் என பெண் வீட்டாரும் இவரை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டனர். அவர் காட்டிய விவாகரத்து பத்திரம் ஒன்றை மட்டும் பார்த்து ஏமாந்து போயுள்ளனர்.
ரூ. 70,000 சம்பளம் வாங்கும் துஷார் அதை வெகு சில நாட்களிலே செலவழித்துவிட்டார். மாதத்தின் இரண்டாவது பாதியில் மனைவிகளின் சம்பளத்தில் அங்கு கொஞ்சம், இங்கு கொஞ்சம் என வாங்கி பிழைத்துள்ளார். அவரை திருமணம் செய்து கொண்ட பெண்களில் மூன்று பேர் என்ஜினியர்கள்.
ஒரு மனைவியுடன் மூன்று நாள்...
தற்போது எங்களிடம் அவரது ஐந்து திருமண படங்கள் சிக்கியுள்ளது. அவர் ஒவ்வொரு மனைவியுடன் மூன்று நாள் தான் தங்கியுள்ளார். நான்காவது நாள் வேலை விஷயமாக வெளியூர் செல்கிறேன், அலுவலக கூட்டம் என்று எதாவது சாக்கு சொல்லி வந்துள்ளார் என்றார்.
சிக்கியது எப்படி...
இப்படி 14 பெண்களை ஏமாற்றிய துஷாரின் குட்டுக்கள் அவரது 29 வயதான 14வது மனைவியின் மூலம் வெளிவந்துள்ளது.
தற்போது போலீஸ் பிடியில் சிக்கியிருக்கும் துஷாரை வரும் 29ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவர் வேலை பார்த்து வரும் ஏர் இந்தியா நிறுவனமும் துஷார் மீது சக பெண் ஊழியர்களுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக குற்றம்சாட்டி, விசாரணை நடத்தி வருகிறது. தற்போது இந்த ஐந்து மனைவிகள் போலீசில் புகார் கொடுத்திருப்பதால் அவர் வேலையில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் எனத் தெரிகிறது.