ஓட்டுப் போட வாக்காளர்களுக்குப் பணம் தந்தது தமிழகத்திற்கு பெரும் அவமானம்- இளங்கோவன்
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதியில், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு நடவடிக்கையை இளங்கோவன் நேற்று தொடங்கி வைத்தார்.
ஓட்டுக்கு நோட்டு - புதிய கலாச்சாரம்...
அப்போது அவர் பேசுகையில், இங்குள்ள ஒரு கட்சியின் தலைவர்கள் ஊழலை வளர்த்த பெருமைக்குரியவர்கள். தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதைப் போலவே, அவர்களது தொண்டர்களும் இப்போது நடந்து வருகின்றனர். தற்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் புதிய கலாச்சாரத்தையும் அந்தக் கட்சி ஆரம்பித்து வைத்துள்ளது.
உண்மையில் நான் டெல்லிக்குச் செல்லும்போதெல்லாம், எனக்கு தலைக்குனிவுதான் ஏற்படுகிறது. ஓட்டுக்கு 200 ரூபாய், 300 ரூபாய் என தரும் அந்தக் கட்சியினரின் செயல் தமிழகத்திற்குப் பெரும் தலைக்குனிவை தேசிய அளவில் ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் சாபம்...
இந்தக் கட்சி மது விற்பனையையும் மாநிலம் முழுவதும் கடை பரப்பி செய்து வருகிறது. இதனால் பெண்களின் சாபத்தையும் அவர்கள் வாங்கிக் கட்டிக் கொள்கின்றனர். நிச்சயம் இந்த சாபம் அவர்களை சும்மா விடாது.
1967ம் ஆண்டு பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியும், ஆபாச பேச்சுக்களாலாலும் ஆட்சியைப் பிடித்தார்கள் அவர்கள். அன்றே ஆரம்பித்து விட்டது தமிழகத்தின் வீழ்ச்சி.
மகன், மகளுக்குப் பதவி தராத சோனியா...
இந்திரா காந்தியும், ராஜீ்வ் காந்தியும் நாட்டுக்காக தங்களது உயிரை ஈந்தவர்கள். சோனியா காந்தி விரும்பியிருந்தால் அவரே பிரதமராகியிருக்கலாம். ஏன் தனது மகன் ராகுல் காந்தியை துணைப் பிரதமராக்கியிருக்கலாம். மகள் பிரியங்காவை டெல்லியின் முதல்வராக்கியிருக்கலாம். பிரியங்காவின் கணவரை ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக்கியிருக்கலாம். ஆனால் நேரு- காந்தி பரம்பரை அப்படி நடந்து கொள்ளாது.
மாறாக, தேசத்தின் நலனுக்காகவும், மதச்சார்பற்ற ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாக்கவும் மட்டுமே அது உழைக்கும்.
சசி பிடியில் சிக்கிய ஜெ...
இன்னொரு பக்கம், ஒரு தலைவரை, ஒரு குடும்பமே சிறை பிடித்து வைத்துள்ளது. அந்தத் தலைவர் கொடநாடு சென்று பல மாதங்களாகி விட்டது. இன்னும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின்னர் மக்களை சந்திக்கவே அவர் பயப்படுகிறார். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் புகார் கூறுகிறார்.
காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டது. எல்லாத் தேர்தல்களையும் அது சந்திக்கிறது. வெற்றி, தோல்வியால் அது துவண்டு போய் விடாது. ஆனால் சில கட்சிகள் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தேர்தலையே புறக்கணிக்கிறார்கள்.
இரு திராவிடக் கட்சிகளும், தங்களது ஊழல்களை மறைப்பதற்காக, மாறி மாறி ஆட்சிக்கு வருவதற்காக ரகசிய ஒப்பந்தம் ஏதேனும் போட்டிருக்கிறார்களோ என்று எனக்கு சந்தேகமாக உள்ளது என்றார் இளங்கோவன்.
நேரடியாக திமுகவைக் குறிப்பிடாமல் இளங்கோவன் கடுமையாக சாடியிருப்பது காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.