ராஜபக்சேவுக்கு தமிழின அழிப்பில் தான் ஆர்வம்-ராஜா
புதுச்சேரி: இலங்கை அதிபர் ராஜபக்சே அரசியல் தீர்வு காண்பதில் விருப்பமில்லாதவராக இருக்கிறார். அவர் இன அழிப்பு தான் தீர்வாக இருக்கும் என்று அவர் கருதுகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஈழத்தமிழர் பிரச்சனை முடிவில்லாத ஒன்றாக மாறிவிட்டது. சில மாதங்களுக்கு முன்பே போர் முடிந்துவிட்டதாக ராஜபக்சே அறிவித்திருந்தார். ஆனால் இன்று வரை வன்னி முகாம்களில் இருக்கும் 3.5 லட்சம் தமிழர்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அவர்கள் சித்ரவதை முகாம்களில் சிறைபட்டு கிடக்கின்றனர். ராஜபக்சேவுக்கு அரசியில் தீர்வு காண்பதில் விருப்பமில்லை. அவர் தமிழின அழிப்பு தான் தீர்வாக இருக்கும் என கருதுகிறார்.
போர் முடிவில் இலங்கையில் இருக்கும் தமிழர்களின் நலவாழ்வுக்காக இந்தியா ரூ. 600 கோடி வழங்கும் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்திருந்தார். இந்த நிதி தமிழர்களுக்குப் போய்ச் சேருகிறதா என்று யாருக்கும் தெரியாது.
முகாம்களில் வதைபட்டு கிடக்கும் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
பணவீக்கம் குறைகிறது... விலைவாசி உயர்கிறது
நாட்டில் விலைவாசி உயர்வுக்கு வறட்சி மட்டும் காரணம் அல்ல. காங்கிரஸ் அரசின் தவறான பொருளாதார கொள்கையும் ஒரு முக்கிய காரணம். பணவீக்கம் ஒரு பகக்த்தில் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அதே சமயத்தில் இன்னொரு பக்கம் விலைவாசி உயர்ந்து வருகிறது.
பணவீக்கம் குறைவதன்மூலம் ஏன் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை மத்திய அரசு யோசிக்க வேண்டும்.
இதை கட்டுப்படுத்த ஆன்லைன் வர்த்தம், பதுக்கல், கள்ளச்சந்தை போன்றவற்றை தடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களுக்கான சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். சமீபத்தில் கொண்டு வரப்பட்ட உணவு உரிமைச் சட்டத்தால் மக்களுக்கு எந்த சலுகை கிடைக்கவில்லை. மாறாக தற்போது இருக்கும் சலுகைகளும் பறிபோகும் அபாயம் உள்ளது.
நாடு முழுவதும் போராட்டம்...
இந்த விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நவம்பர் மாதம் இடதுசாரி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஊர்வலம் நடத்தப்படும் என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications