வானிலை மையத்தின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய பைலட்
சென்னை: சித்தூர் செல்லும் வழியில் மழை மற்றும மின்னல் ஏற்படலாம். வானிலை மோசமாக இருக்கிறது என ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலைய வானிலை மையம் விடுத்த எச்சரிக்கையை, ரெட்டி பயணித்த ஹெலிகாப்டரை செலுத்திய விமானிகள் அலட்சியம் செய்தது தான் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி நேற்று முன்தினம் சென்ற பெல் 430 என்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த ஐந்து பேருமே மரணமடைந்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், விபத்துக்கு ரெட்டி சென்ற ஹெலிகாப்டரை ஓட்டிய விமானிகளின் அலட்சியமே காரணமாக கூறப்படுகிறது.
ஹெலிகாப்டரில் இருந்த விமானிகளில் ஒருவர் ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலைய வானிலை மையத்தின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இரு விமானிகளில் ஒருவர் கடந்த 2ம் தேதி காலை 6.30 மணிக்கு வானிலை மையத்தை தொடர்பு கொண்டார். அப்போது அவரிடம் சித்தூர் செல்லும் வழியில் வானிலை மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஹெலிகாப்டர் பறக்கும் உயரத்தில் வானத்தில் தொடர் மழை மற்றும் மின்னல் ஏற்படும். எனவே பயணம் செய்ய வேண்டாம் என அவருக்கு போதுமான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நாங்கள் தெரிவித்த இந்த தகவல்களை கேட்டு கொண்டதாக அவர் பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளார். அந்த பதிவேடு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது அது திறக்கப்படும்.
இது போன்ற எச்சரிக்கைகளை விமானிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என விதி உள்ளது. ஆனால், அவர்கள் பின்பற்றவில்லை.
மேலும், அந்த ஹெலிகாப்டர் 1.5 கிமீ., உயரத்தில் தாழ்வாக பறந்ததால் அது காற்றின் சுழற்சியில் சிக்கியுள்ளது. ஹெலிகாப்டர் சிதறி போவதற்கு இதுவும் காரணமாக இருக்க முடியும். இது தொடர்பான அறிக்கைகளை மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.
உடைகளை வைத்து அடையாளம் கண்டனர்...
விபத்தில் சிக்கி ஐவரின் உடல்களும் கருகிப் போய் விட்டனர். இருப்பினும் அவர்களின் உடைகளை வைத்துத்தான் யார் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கி ஹெலிகாப்டர் சுக்கு நூறாக சிதறி, எரிந்து போய் விட்டதால் அதில் பயணம் செய்த ரெட்டி உள்ளிட்டோரும் உடல் கருகிப் போய் விட்டனர்.
சிலரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப் போயுள்ளது. அவர்களின் கை, கால்களும் கூட துண்டிக்கப்பட்டு விட்டனவவாம்.
சிதறிப் போய்க் கிடந்த உடல் பாகங்களை சேகரித்த பின்னர் அவர்கள் அணிந்திருந்த உடை உள்ளிட்டவற்றை வைத்துத்தான் அடையாளம் கண்டுள்ளனர்.
கொல்லப்பட்ட ஐந்து பேரில் முதல்வரின் முதன்மைச் செயலாளர் சுப்ரமணியத்தின் உடல் மட்டுமே உருக்குலையாமல் அப்படியே இருந்துள்ளது. மற்ற நான்கு பேரின் உடல்களும் சிதறிப் போய் விட்டனவாம்.
உடல் கிடந்த இடத்தைக் கண்டு பிடித்த பின்னர் அங்கு சிதறிக் கிடந்த உடல் பாகங்களை சேகரிப்பு மிகக் கடினமான செயலாக இருந்துள்ளது. கடுமையான மழை மற்றும் அபாயகரமான மலைச் சிகரம் என்பதால் வீரர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே, தங்களது உயிரைப் பணயம் வைத்து உடல் பாகங்களை சேகரித்துள்ளனர்.
உயிரிழந்து பல மணி நேரங்கள் ஆகி விட்டதாலும், தொடர்ந்த மழை பெய்து வந்ததாலும், சிலரது உடல்கள் அழுகத் தொடங்கியிருந்தன.
விக்ரம்ஜித் துக்கால் என்ற உதவி எஸ்.பியின் தலைமையில்தான் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கமாண்டோக்களை கயிற்றின் மூலமாக கீழே இறக்கி ஹெலிகாப்டர் கிடந்த இடத்திற்கு அனுப்பியுள்ளனர்.
உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு கர்னூல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அங்கு டாக்டர் மல்கொண்டய்யா தலைமையிலான குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்தனர்.
முதல்வர் ரெட்டியின் தலை அடையாளம் காண முடியாத அளவுவுக்கு நசுங்கிப் போயிருந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
ரெட்டியின் உடலைக் கண்டுபிடித்து மீட்பதற்குத்தான் நெடு நேரம் பிடித்ததாம். காரணம், அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் கருகிப் போய் விட்டதே. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடி உடல் பாகங்களை மீட்டுள்ளனர்.