லஞ்சம்-விருதுநகர் வருமான வரி ஆய்வாளர் கைது
விருதுநகர்: ரூ. 5 ஆயிரம் வாங்கிய விருதுநகர் வருமான வரி ஆய்வாளர் கையும்களவுமாக பிடிபட்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு வங்கி ஒன்றில் நிர்வாகியாக பணியாற்றி வருபவர் முனிராஜ். இவரது மனைவி இந்திராணி. இவர் தனியார் பள்ளி ஒன்றின் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் இவர்கள் இருவரும் வருமான வரி செலுத்துவது தொடர்பாக, விருதுநகர் வருமான வரித் துறை அலுவலகத்துக்கு சென்றுள்ளனர். அங்கு வருமான வரி ஆய்வாளராக பணிபுரியும் நாதமுனி என்பவரை அனுகி விபரம் கேட்டுள்ளனர். அப்போது அவர் ரூ 5 ஆயிரம் லஞ்சம் கேட்டு, வற்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து முனிராஜ் சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து சென்னை வருமானவரி துறை அதிகாரிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றனர்.
பின்னர் அவர்களின் ஆலோசனையின் பேரில் முனிராஜ், நாதமுனியை சந்தித்து அவருக்கு ரூ. 5 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு ஒளித்திருந்த அதிகாரிகள்
நாதமுனியை கையும்களவுமாக பிடித்தனர்.
இதையடுத்து நாதமுனியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.