முன் கூட்டியே விடுவிக்கக் கோரி நளினி மனு
ராஜிவ் கொலை வழக்கில் முதலில் நளினிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் கருணை மனுக்கள் மூலம் இது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
இந் நிலையில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில்,
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். கடந்த 18 வருடமாக நான் சிறையில் உள்ளேன்.
14 ஆண்டுகள் முடிந்த பிறகு ஆயுள் தண்டனை கைதியான என்னை விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டு மாநில ஆலோசனைக் கமிட்டியிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால், என் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அந்தக் கமிட்டியின் பரிந்துரை அடிப்படையில் என்னை விடுவிக்க தமிழக அரசும் மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். இதையடுத்து எனது விடுதலை குறித்து மறுஆய்வு செய்யும்படி ஆலோசனை கமிட்டிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் ஆயுள் கைதிகளுக்கான ஆலோசனை வாரியத்தை மறுசீரமைப்பு செய்யவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிறப்பித்து ஒரு வருடமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்னை விடுதலை செய்யவும் இல்லை.
நான் ஏற்கனவே சோனியாகாந்திக்கு இது குறித்து கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன். இதற்கிடையே ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா என்னை வேலூர் சிறையில் நேரில் சந்தித்தார். அப்போது நடந்த சம்பவங்களை மறந்து என்னை மன்னித்து விட்டதாக கூறினார்.
பாதிக்கப்பட்ட குடும்பமே என்னை மன்னித்துள்ள நிலையில் விடுதலை செய்ய மறுக்கின்றனர். 43 வயதான எனக்கு 18 ஆண்டுகள் சிறை வாழ்க்கை கழிந்து விட்டது. எனவே ஆலோசனை வாரியத்தை நியமிக்க வேண்டும் என்ற உத்தரவை உடனே அமல்படுத்த வேண்டும். என்னை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது..
நளினிக்கு எம்.சி.ஏ. பட்டம்:
இந் நிலையில் சிறையிலேயே நளினி எம்.சி.ஏ படிப்பை முடித்துள்ளார். விரைவில் அவருக்கு பட்டம் கிடைக்கும் என்று இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழக பிராந்திய இயக்குநர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
நளினி தவிர அவரது கணவர் முருகன், பேரறிவாளன் ஆகியோரும் எம்.சி.ஏ. படித்து வருகின்றனர்.
மூன்று பேருமே இறுதியாண்டில் உள்ளனர். இவர்களில் நளினி தனது பிராஜக்ட்டை சமர்ப்பித்து விட்டாராம். அது பரிசீலனையில் உள்ளது. முடிந்ததும் அவருக்கு பட்டம் கிடைக்கும் என பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நளினி மிகச் சிறப்பாக செய்துள்ளார். முதல் வகுப்பில் அவர் தேர்ச்சி பெறுவார். மேலும், எம்.சி.ஏ பட்டம் பெறும் முதல் கைதி என்ற பெருமையும் அவருக்குக் கிடைக்கும் என்றார்.
சிறைத் தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பே பட்டதாரி ஆவார் நளினி. ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்ட மனித வெடிகுண்டான தனுவையும், அவரால் முடியாவிட்டால் வெடிகுண்டுச் சம்பவத்தை நிகழ்த்த அனுப்பப்பட்டிருந்த சுபாவையும் ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்துக்குக் கூட்டி வந்தவர் நளினி.
தற்போது எம்.சி.ஏ படித்து வரும் நளினி, முருகன், பேரறிவாளன் ஆகியோரின் படிப்புத் திறமை வியக்கத்தக்க வகையில் இருப்பதாக அவர்களுக்கு சிறைக்கு வந்து டியூஷன் எடுத்த ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று பேரில் முருகன்தான் மிகத் திறமையானவராக இருக்கிறாராம். வழக்கமாக வெளியில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை விட முருகன் மிகத் திறமையாக படிப்பதாகவும், கம்ப்யூட்டர்கள் குறித்த அறிவு அவருக்கு சிறப்பாக இருப்பதாகவும் டியூஷன் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் சிறைக்குள் இருப்பதால் அதுதொடர்பான பல நடைமுறைச் சிக்கல்களால் இவர்களுக்கு தேவையான அனைத்தும் கிடைப்பதில் சிரமம் உள்ளதாம்.