ராகுல் வருகையால் செலவு ரூ. 1 கோடி!
சென்னை: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் 3 நாள் தமிழகம் மற்றும் புதுச்சேரி சுற்றுப் பயணத்திற்கு ரூ. 1 கோடிக்கு மேல் செலவாகியுள்ளதாம்.
நாடு முழுவதும் இப்போது பரபரப்பாக பேசப்படுவது சோனியா காந்தி முதல் மத்திய அமைச்சர்கள் வரை அனைவரும் திடீரென சிக்கணத்திற்கு மாறிய கதைதான்.
ஆனால் வெறும் 3 நாள் பயணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு சமீபத்தில் ராகுல் காந்தி வந்து போனதற்கான செலவு ரூ. 1 கோடிக்கு மேல் என்ற தகவல் வயிற்றில் புளியைக் கரைப்பதாக உள்ளது.
ராகுல் காந்தியின் பயணத்திற்கு சரியாக எவ்வளவு செலவானது என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் அவருக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளைப் பார்க்கும்போது ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் ஆகியிருக்கும் என்று கணக்கிட முடிகிறது.
ராகுல் காந்தி பயணம் செய்த ஹெலிகாப்டரின் ஒரு மணி நேர வாடகை ரூ. 1.5 லட்சமாம். மேலும் அவர் பயணம் செய்த பீச்கிராப்ட் ஹெலிகாப்டரின் வாடகை மணிக்கு ரூ. 1.1 லட்சம். இந்த ஹெலிகாப்டரைத்தான் அவர் அதிகம் பயன்படுத்திநார்.
ஹெலிகாப்டர் வாடகைக் கட்டணமே ரூ. 1 கோடியைத் தாண்டும் என்கின்றனர்.
டெல்லியைச் சேர்ந்த ஏர் சார்ட்டர் சர்வீஸ் பிரைவேட் லிமிட்டெட்டின் பீச்கிராப்ட் கிங் ஏர் 350 ரக ஹெலிகாப்டரைத்தான் ராகுல் காந்தி பயன்படுத்தினார். வாடகை தவிர 10 சதவீத சேவை வரி தனியாக வரும். மேலும், ஹெலிகாப்டர் ஊழியர்களுக்கான செலவுகளையும், சாப்பாடு உள்ளிட்டவற்றையம் காங்கிரஸ் கட்சியே கவனித்துக் கொண்டது.
இதுதவிர ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றில் ராகுல் காந்தியின் பாதுகாப்புக்காக பின் தொடர்ந்து வந்த எஸ்.பி.ஜி படையினரின் செலவுகள் தனியாக வருகிறது.
ராகுல் காந்தி பல வகை ஹெலிகாப்டர்களை தனது பயணத்தின்போது பயன்படுத்தினார்.
திருவனந்தபுரத்திலிருந்து செப்டம்பர் 8ம் தேதி அவர் பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டரில் நாகர்கோவில் வந்தடைந்தார். அதற்கு முன்னதாக பீச்கிராப்ட் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வந்திருந்தார்.
கோவையிலிருந்து டெல்லிக்குத் திரும்பிச் சென்றபோது பால்கன் 2000 விமானத்தை அவர் பயன்படுத்தினார். இந்த விமானம் மும்பையைச் சேர்ந்த தாஜ் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.
இந்த நிறுவனத்தின் இணையதளம் டெல்லி - கோவை ஒரு வழிப் பாதை பயணத்திற்கான கட்டணம் ரூ. 20,32,250 என்று கூறுகிறது.
தனது முதல் நாள் பயணத்தின்போது ராகுல் காந்தி திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் பறந்து வந்தார். பின்னர் அங்கிருந்து நெல்லை, விருதுநகர், மதுரை என பறந்தார்.
அடுத்த நாள் தஞ்சாவூருக்கு பீச்கிராப்ட் ஹெலிகாப்டரில் பறந்தார்.
இந்த பயணத்தின்போது, திருவனந்தபுரம் - மதுரை மற்றும் இரவு மதுரை தங்கல் ஆகியவற்றுக்கான செலவு ரூ. 15 லட்சமாக கணக்கிடப்பட்டுள்ளது.
2வது நாலில், தஞ்சைக்கு வந்த ராகுல் காந்தி அங்கிருந்து அதே ஹெலிகாப்டரில் புதுச்சேரி பறந்தார். பின்னர் இன்னொரு ஹெலிகாப்டரில் ஏறி விழுப்புரம், வேலூர் சென்றார். பின்னர் அரக்கோணம் கடற்படைத் தளத்திற்குச் சென்று இறங்கி, அங்கிருந்து பி.350 ரக ஹெலிகாப்டரில் ஏறி சென்னை திரும்பினார்.
சென்னையிலிருந்து ஓசூருக்கு அதே ஹெலிகாப்டரில் சென்றார் ராகுல்.
ஓசூரில் உள்ள தனேஜா ஏரோஸ்பேஸ் நிலையத்தில் ஹெலிகாப்டரை நிறுத்திக் கொள்வதற்கான வாடகைக் கட்டணமான ரூ. 7500த்தை காங்கிரஸ் கட்சி கட்டியதாம்.
பின்னர் அதே ஹெலிகாப்டரில் ஏரி சேலம் சென்ற ராகுல் அங்கிருந்து கோவை போய்ச் சேர்ந்தார்.
சேலம் விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் இறங்குவது உள்ளிட்டற்றுக்கான வாடகைக் கட்டணத்தை சென்னையிலேயே செலுத்தி விட்டார்களாம். காரணம், சேலத்தில் விமான நிலையம் செயல்பாட்டில் இல்லாததால்.
கோவை விமான நிலையத்தில் ஹெலிகாப்டரை இறக்கி, நிறுத்திக் கொள்வதற்கான வாடகைக் கட்டணமாக ரூ. 6800 செலுத்தியுள்ளனர். இந்தப் பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கட்டணமாக ரூ. 1500 செலுத்தப்பட்டுள்ளது.
இப்படியாக அத்தனை செலவுகளையும் பார்த்தால் ரூ. 1 கோடியைத் தாண்டி ஓடியுள்ளதாக தெரிய வருகிறது.
''ஒரு அரசியல் தலைவரின் முக்கியக் கடமை என்னவென்றால், சிக்கணமாக இருப்பதுதான். பணத்தைத் தேவையில்லாமல் செலவழிக்கக் கூடாது'' - இது ராகுல் காந்தி தமிழகம் வந்திருந்தபோது செய்தியாளர்களிடம் சொன்ன வார்த்தை.












Click it and Unblock the Notifications