சோழவந்தான் ரயில் நிலையத்தில் வெடித்தது வெங்காய வெடி- போலீஸ்
இந்த வெடி விபத்து தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சோழவந்தான் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 6.10 மணியளவில் பலத்த சப்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். ரயில் நிலைய மேற்கூரை பிய்த்தெறியப்பட்டது.
இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தீவிரவாத செயலோ என்று பயந்து அந்த சமயத்தில் ரயில் நிலையத்தில் நின்றிருந்த நெல்லை பாசஞ்சர் ரயிலின் பயணிகள் இறங்கி ஓடினர்.
இந்த கோர விபத்தில், ஸ்டேஷன் மாஸ்டர் ஆறுமுகம், செல்லத்துரை (35), மேஸ்திரி ஆறுமுகம் (48),. சோழவந்தான் உலகநாதன் (6), காளியம்மாள் (70), ரயில்வே டெக்னீசியன் அழகுமலை (54), தஞ்சையைச் சேர்ந்த போட்டோகிராபர் ஆனந்தன் (26), அவரது மகன்
லோகேஷ் (1), சுப்பிரமணியன், மருதப்பன் ஆகியோர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் தென் மண்டல ஐஜி கிருஷ்ணமூர்த்தி, டிஐஜி பாலசுப்ரமணியம், புறநகர் மாவட்ட எஸ்.பி. மனோகர் உள்ளிட்டோர் விசாரணையில் இறங்கினர்.
முதலில் பலியானவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், ஒருவர் பரமசிவம். 35 வயதான இவர் சோழவந்தான் சுந்தரம் பிள்ளை என்பவரின் மகன், வெற்றிலை வியாபாரி.
இன்னொருவர் பெயர் ராமர். சோழவந்தானைச் சேர்ந்தவர். 40 வயதான இவர் பட்டாசு வியாபாரி ஆவார். வெங்காய வெடிகளை வாங்கிக் கொண்டு வந்தபோது, ரயிலிலிருந்து வெங்காய வெடி மூட்டையை பிளாட்பாரத்தில் இறக்கி வைத்தபோதுதான் அது வெடித்துச் சிதறியுள்ளது. இதனால்தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தது.
மொத்தம் 2 மூட்டை வெங்காய வெடிகளுடன் வந்துள்ளார் ராமர். ஒரு மூட்டையை ரயிலிலிருந்து இறக்கி வைத்தார். இன்னொரு மூட்டையை எடுப்பதற்காக எத்தனித்தபோது முதல் மூட்டை வெடித்து விட்டது. 2வது மூட்டை அப்படியே இருந்தது என்று டிஐஜி பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
தடயவியல் நிபுணர்களும், வெடிகுண்டு நிபுணர்களும் வெடிவிபத்து நடந்த இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்தனர்.
மேலும், இந்த சம்பவத்திற்கு தீவிரவாதிகளோ அல்லது நக்சலைட்டுகளோ காரணம் அல்ல என்றும் தெரிய வந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு...
இந்த சம்பவம் காரணமாக மதுரை - திண்டுக்கல் இடையிலான ரயில் போக்குவரத்து சுமார் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது. பல ரயில்கள் மதுரை மற்றும் திண்டுக்கல்லோடு நிறுத்தி வைக்கப்பட்டன. அதன் பின்னரே ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.
முன்னதாக இந்த விபத்தில் 4 பேர் பலியாகிவிட்டதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
2 பேர் கைது:
இந் நிலையில் வெடி விபத்து தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் அம்பாதுறையைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று வெடி விபத்தில் உயிரிழந்த ராமரின் உறவினர் இவர்.
இவர் திருட்டுத்தனமாக தயாரித்த வெங்காய வெடியை ராமர் விற்பனைக்காக கொண்டு சென்றபோதுதான் இந்த துயர சம்பவம் நடந்தது.
மேலும் ஆனந்தனுக்கு வெடி மருந்து சப்ளை செய்த தெம்மம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜெயந்த், உயர் அதிகாரிகளுடன் சோழவந்தானுக்கு சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பார்த்து அவர் ஆறுதல் கூறினார்.
இந்த வெடிவிபத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ரயில்களில் பட்டாசுகள் எடுத்துச் செல்வதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பயணிகளின் உடமைகளை ரயில்வே போலீசாருடன் இணைந்து மாநில போலீசாரும் சோதனையிட்டு வருகின்றனர்.
ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.