போதையில் வீடு புகுந்து பெண்ணிடம் சில்மிஷம் - 3 சிஆர்பிஎப் போலீஸார் கைது
கோவை குருடம்பாளையத்தில் சி.ஆர்.பி.எப். பயிற்சி முகாம் உள்ளது. இங்கு ஆந்திராவை சேர்ந்த சத்யம் (27), சென்னையைச் சேர்ந்த அலெக்சாண்டர் (27), உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த கமல் சத்தார் (25) ஆகியோர் பயிற்சிக்காக வந்திருந்தனர்.
மூன்று பேரும் ஒரு மதுக்கடையில் வயிறு முட்ட குடித்துள்ளனர். கடும் போதையில், தள்ளாடியபடி வந்த அவர்கள், உக்கடத்தில் உள்ள ரபீக் என்பவரது வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை.
என்ன செய்கிறோம் என்பது தெரியாமல், வீட்டில் இருந்த பெண்களிடம் 3 பேரும் மோசமாக நடந்துள்ளனர். ஒரு பெண்ணின் கையைப் பிடித்து அராஜகம் செய்துள்ளனர்.
பின்னர் வெளியே வந்த அவர்கள் அருகில் இருந்த ரகமத்துல்லா என்பவரின் வீட்டிற்குள்ளும் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.
அச்சமடைந்த பெண்கள் வெளியில் ஓடி வந்து உதவி கேட்டு குரல் எழுப்பினர். இதையடுத்து அந்த மூன்று அயோக்கியர்களும் தப்பி ஓடப் பார்த்தனர். ஆனால் பொதுமக்கள் அவர்களை வளைத்துப் பிடித்தனர். அவர்களிடமிருந்த அடையாள அட்டைகளையும், ஒருவரது பையில் இருந்த மது பாட்டிலையும் பறிமுதல் செய்தனர்.
3 பேரையும் உக்கடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு குடித்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
அராஜகமாக நடந்து கொண்ட அந்த மூன்று பேர் மீதும் அத்து மீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 3 பேரையும் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
ஈவ் டீசிங்-மாணவி தீக்குளித்து மரணம்:
இதற்கிடையே, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் படித்த மாணவி திவ்யா என்பவர் ஈவ் டீசிங் காரணமாக தீக்குளித்தார். சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த 6ம் தேதி இரவு மாணவர்களின் ஈவ்டீசிங் கொடுமையால் தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார் திவ்யா. சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று முன்தினம் இரவு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவரது சாவிற்கு காரணமான ஒரு மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 2 பேர் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.