தீபாவளி: ரயில், பஸ் எல்லாம் ஃபுல்-மக்கள் அவதி
தீபாவளிப் பண்டிகை வருகிற 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் வசித்து வரும் தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்ளைச் சேர்ந்த மக்கள் பெரும் திரளாக சொந்த ஊர்களுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலனோர் முன்கூட்டியே ரயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். பலர் அரசு பஸ்களிலும் முன்பதிவு செய்துள்ளனர். ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு செய்துள்ளனர்.
கூட்ட நெரிசல் அதிகம் இருப்பதால் பல சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. அவையும் நிரம்பி விட்டன. இதனால் டிக்கெட் கிடைக்காத பலர் எப்படி சொந்த ஊர்களுக்கு செல்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
தீபாவளிக்காக 40 சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும் அனைத்து ரயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டன. குறிப்பாக 14, 15, 16 ஆகிய 3 நாட்களில் பயணம் செய்ய எந்த ரெயிலிலும் இடமில்லை.
16ம் தேதி எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு பகல் நேர சிறப்பு ரயில் (0603) ஒன்று விடப்பட்டுள்ளது. இந்த ரயில் காலை 9.30 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. படுக்கை வசதி இல்லாத இந்த ரெயிலில் 12 பெட்டிகள் 2ம் வகுப்பு உட்கார்ந்து செல்லும் வசதி கொண்டது. 6 பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பொதுப் பெட்டிகளாகும். கடைசி நேர கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த சேவையை தெற்கு ரயில்வே அளிக்கிறது.
சுமார் 2,500 பேர் ஒரே நேரத்தில் பயணம் செய்யக் கூடிய இந்த ரயிலிலும் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. இன்று காலை நிலவரப்படி 2ம் வகுப்பு உட்கார்ந்து செல்லும் பெட்டியில் 221 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். ஒரு சேர்கார் பெட்டிக்கு 50 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். தீபாவளி இரவு நெல்லை சென்றடைய இந்த ரயிலும் நிரம்பி விட்டதால் தென்மாவட்ட மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
பஸ்களிலும்...
இதேபோல் அரசு விரைவு பஸ்களிலும் 3 நாட்களுக்கு முன்பதிவு முடிந்து விட்டது. 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் தேவையான பகுதிகளுக்கு உடனுக்குடன் சிறப்பு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோயம்பேடு பஸ் நிலையம் சென்றால் சொந்த ஊர் செல்வதற்கு விரிவான பஸ் வசதிகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
கும்பகோணம், தஞ்சாவூர், சிதம்பரம், சேலம், வேலூர், திருவண்ணாமலை, கோவை, விழுப்புரம் போன்ற பகுதிகளுக்கு மற்ற போக்குவரத்து கழக பஸ்களும் இயக்கப்படுகின்றன.
திருநெல்வேலி, மதுரை, திருச்சி, உள்ளிட்ட பகுதிகளுக்கு மதுரை கோட்ட பஸ்களும் விடப்பட்டுள்ளன.
அதிரடி கறப்புக்கு தயாராகும் ஆம்னிகள்..
ஆம்னி பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. வழக்கமாக செல்லும் ஆம்னி பஸ்களில் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்துள்ளனர். ஒரு சில ஆம்னி பஸ் நிறுவனத்தினர் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மக்களிடமிருந்து பணத்தைக் கறக்க திட்டமிட்டுள்ளனர். அவர்களை பிடிக்க போக்குவரத்து அதிகாரிகளும் போலீசாரும் காததுள்ளனர்
நெல்லைக்கு விடப்பட்டுள்ளதைப் போல இன்னொரு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே விட்டால், குறிப்பாக 15ம் தேதி இயக்கினால் நலமாக இருக்கும் என காத்துக் கிடக்கும் பயணிகள் விரும்புகின்றனர். தெற்கு ரயில்வே அவர்களுக்கு தீபாவளியை இனிப்பாக்க முன்வருமா...