சிதம்பரம் கோவில்- தீட்சிதர்கள் பேனர் அகற்றம்!
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் மற்றும் இந்து ஆலய பாதுகாப்பு குழுவினர் வைத்திருந்த பேனர்களை போலீஸார் அகற்றினர்.
சிதம்பரத்தில் உலகப் புகழ் பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோயிலை கடந்த பிப்ரவரி மாதம் முதல் தமிழக அரசே ஏற்று நடத்தி வருகின்றது.
இந்த நிலையில் கோவில் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் அர்ச்சனை சீட்டு ரூ. 5 நெய்தீப சீட்டு ரூ. 2, சிற்றம்பல மேடையில் சிறப்பு தரிசனம் செய்ய கட்டணம் ரூ. 50, விழாக்கால சிறப்பு தரிசனம் ரூ. 100 கட்டணம் என்று இந்து அறநிலையத்துறை நிர்ணயித்துள்ளது.
இந்த விவரம் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து ஆலய பாதுகாப்பு குழு சுவரொட்டிகள், கண்டன போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். கோவிலின் நான்கு கோபுர வாசல்களிலும் அரசின் நடவடிக்கையை கண்டித்து டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தனர்.
இது பற்றி செயல் அதிகாரி சிவக்குமார், சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். இதையடு்த்து விரைந்து வந்த போலீஸார் அந்த டிஜிட்டல் பேனர்களை அகற்றினர்.
மேலும், தீட்சிதர்கள் ஆலய தரிசன கட்டண விவரங்களை அறிந்து கொள்ள சில பெயர்களை குறிப்பிட்டு அவர்களை அணுகலாம் என ஒரு பேனரில் குறிப்பிட்டிருந்தனர். இதையும் போலீஸார் அகற்றினர்.












Click it and Unblock the Notifications