முதலீடு: திமுகவினருக்காக உஸ்பெகிஸ்தான் இந்திய தூதரிடம் அழகிரி சிபாரிசு!?

இதுதொடர்பாக உஸ்பெகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர் பேராசிரியர் சையத் மனால் ஷா அல்குவாத்ரிக்கு அழகிரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். செப்டம்பர் 11ம் தேதியிட்ட கடிதம் மூலம் நேரடியாக தூதருக்கே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாம்.
அழகிரியின் தனிச் செயலாளரான பிரதீபா யாதவ் அதில் கையெழுத்திட்டுள்ளார்.
அக்கடிதத்தில், அமைச்சரின் உத்தரவுப்படி, எஸ்.கே.பி.சுந்தரம், முகுந்த் விஜயன் ஆகியோருக்கு உஸ்பெகிஸ்தானில் தொழில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்த தகவல்களை தந்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேற்கண்ட இருவரில் ஒருவர் மதுரை மாவட்ட திமுக செயலாளரின் மகன். இன்னொருவர் கரூர் திமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமியின் மகன் ஆவார்.
இவர்கள் இருவரும் பிரபலமான முதலீட்டு ஆலோசகர்கள் என்றும், உஸ்பெகிஸ்தானின் தலைநகரான தாஷ்கண்ட் நகருக்கு வரும்போது அவர்களுக்கு அந் நாட்டில் உள்ள தொழில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கி உதவுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் உஸ்பெகிஸ்தான் வருவார்கள். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுங்கள் என்றும் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
கடந்த ஆகஸ்ட் 10ம் தேதிதான் மத்திய அமைச்சரவைச் செயலாளர், அனைத்து அமைச்சர்கள், அமைச்சர்களின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், இந்தியாவில் உள்ள வெளிநாட்டுத் தூதர்களுக்கோ அல்லது வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதர்களுக்கோ எந்தவிதமான கடிதப் போக்குவரத்தையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும், எந்தவிதமான பரிந்துரை, சிபாரிசையும் கோரக் கூடாது என்றும் தெளிவாக கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் அழகிரியின் தனிச் செயாளர் எழுதியுள்ள கடிதம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இருப்பினும் அப்படி யாரும் உஸ்பெகிஸ்தானுக்கு போகவே இல்லை என்று அழகிரியின் செயலகம் விளக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications