2 அமெரிக்கர்களுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு
இதன்மூலம் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் முதல் பெண் என்ற பெருமையை எலினோர் பெற்றுள்ளார். மேலும் இந்த ஆண்டு நோபல் பரிசுக்கு 5 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதிக அளவில் பெண்கள் நோபல் பரிசு பெற்றுள்ளதும் இதுவே முதல் முறையாகும்.
பொது சொத்தை ஒரு குழுவினர் வெற்றிகரமாக நிர்வகிப்பது எப்படி என்பது குறித்த ஆய்வை எலினோர் மேற்கொண்டிருந்தார். அவரது ஆய்வறிக்கைக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இவருடன் இந்த நோபல் பரிசை பகிர்ந்து கொள்ளும் ஆலிவர் வில்லியம்சன் பொருளாதாரத்தில் பரிமாற்றச் செலவு குறித்த ஆய்வை மேற்கொண்டவர் ஆவார்.
நிர்வாகவியல், பொருளாதாரம் ஆகிய துறைகளின் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் பெர்க்ளி பல்கலைக் கழகத்தில் சட்டமும் பயின்றுள்ளார்.
எலினோர், இண்டியானா பல்கலைக் கழகத்தில் கணவர் வின்சென்ட் ஆஸ்ட்ரோமுடன் இணைந்து தனி ஆய்வுப் பிரிவைத் தொடங்கியவர். கூட்டுச் செயல்பாடு, அறக்கட்டளை மற்றும் பொது விவகாரங்களில் நிபுணத்துவம் உடையவர்.
இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு கடைசியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டாலும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு முதலில் ஏற்படுத்தப்படவில்லை. பின்னாளில்தான் ஸ்வீடிஷ் சென்ட்ரல் பேங்க் இந்த விருதை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 10ம் தேதி நடைபெறும் விழாவில் ரூ. 7 கோடி பரிசும் தங்கப் பதக்கமும் ஸ்வீடன் அரசரால் வழங்கப்படும்.