கனடாவில் சிறை பிடிக்கப்பட்ட 76 தமிழ் அகதிகள்- வான்கூவரில் வைத்து விசாரணை
இலங்கை அகதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஒரு குழுவினர் சென்ற கப்பல் ஒன்றை கடந்த சனிக்கிழமை கனடா நாட்டு போலீஸார், பிரிட்டிஷ் கொலம்பியா கடலின் கனடா கடற்பரப்பில் வைத்து தடுத்துப் பிடித்தனர்.
அந்தக் கப்பல் தற்போது விக்டோரியா துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து அவர்கள் வான்கூவருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஓசன் லேடி என்ற பெயர் கொண்ட அந்தக் கப்பலில், 76 பேர் உள்ளனர். சனிக்கிழமை காலை கனடா கடல் எல்லைக்குல் இந்தக் கப்பல் பிரவேசித்ததாக கனடா அமைச்சர் பீட்டர் வேன் லோன் தெரிவித்தார்.
இது இலங்கையிலிருந்து வந்ததாக முதலில் கனடா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறப்பட்டது.
இந்தக் கப்பலில் இருந்தவர்கள் விக்டோரியா துறைமுகத்தில் இறக்கப்பட்டு அங்கிருந்து பேருந்துகள் மூலம் வான்கூவருக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
ஆஸ்திரேலியா-4வது இலங்கையர் நாடு கடத்தல்..
இதற்கிடையே, இலங்கையிலிருந்து தப்பி வந்து புகலிடம் கோரிய அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரை ஆஸ்திரேலிய அரசு கொழும்புக்கு அனுப்பி வைத்தது. இவ்வாறு ஆஸ்திரேலியாவால் அனுப்பப்படும் நான்காவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது பெயர் ரோஷன் பெர்னாண்டோ. சனிக்கிழமை இவரை கட்டாயப்படுத்தி கொழும்புக்கு அனுப்பி வைத்து விட்டது ஆஸ்திரேலயா. படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிப் போய் புகலிடம் கோரியிருந்தார் ரோஷன். இவர் உள்ளிட்ட 11 பேரை கிறிஸ்துமஸ் தீவில் வைத்திருந்தனர் ஆஸ்திரேலிய அதிகாரிகள்.
அவர்களில் ரோஷன் தவிர மற்ற 10 பேரும் நாடு திரும்பி விட்டனர். அவர்களில் 7 பேர் மீண்டும் நாடு திரும்பி விரும்பி வந்தவர்கள். மற்ற 3 பேரும் கட்டாயப்படுத்தி அனுப்பப்பட்டவர்கள். இந்த நிலையில் சனிக்கிழமையன்று ரோஷனையும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்து விட்டனர்.
இலங்கைக்கு அனுப்பப்பட்டவர்களில் இன்டிகா மென்டிஸ் என்பவர் கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்ட ரோஷன், ஒரு மீனவர் ஆவார். தான் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து அவர் கூறுகையில், இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்துள்ளோம். நான் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதைக் கேட்காமல் ஆஸ்திரேலிய அதிகாரிகள் என்னை அனுப்பி வைத்து விட்டனர்.
என்னால் இலங்கையில் வாழ முடியாது. தினசரி பல்வேறு பிரச்சினைகளை நாங்கள் சந்திக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் தலைமறைவு வாழ்க்கையை வாழ முடியாது.
நான் கொழும்பு விமான நிலையத்திலிருந்து எங்கு வேண்டுமானாலும் செல்லத் தடையில்லை. ஆனால் போலீஸார் எனது வீட்டை சோதனையிட்டுள்ளனர். என்னை விசாரிக்க அவர்கள் காத்திருப்பதாகவும் தெரிகிறது. எனது உயிருக்கும் உத்தரவாதம் இல்லை.
எங்களுடன் வந்தவர்களில் ஒருவர் மட்டும் தற்போது கிறிஸ்துமஸ் தீவில் உள்ளார். மற்றவர்களை திருப்பி அனுப்பி விட்டனர் என்றார்.