பெங்களூரி்ல் இந்திய-ரஷ்ய-சீன வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
பெங்களூர்: இந்திய, ரஷ்ய, சீன வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் இன்று பெங்களூரில் நடக்கிறது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ், சீன வெளியுவு அமைச்சர் யாங் ஜெய்சி ஆகியோர் முத்தரப்பு நட்புறவு, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
சமீபத்திய எல்லை பிரச்சனையால் இந்திய-சீன உறவு மோசமாக உள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடக்கிறது. இரு நாடுகளுக்கும் மிக நெருக்கமான நட்பு நாடான ரஷ்யா இந்த விவகாரம் பெரிதாகாமல் தடுக்க மறைமுகமாக முயன்று வருவதாகத் தெரிகிறது.
அருணாசல்-தலாய் லாமாவுக்கு அனுமதி:
இந் நிலையில் திபெத்திய ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா, அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை அருணாசல் பிரதேசத்தில் சுற்றுப் பயணம் செய்ய, சீனாவின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் தனக்கு அனுமதி கடிதம் அனுப்பி இருப்பதாக மாநிலத்தின் வரவேற்பு குழுத் தலைவர் டி.ஜி.ரிங்போசே நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்தியா-யுஎஸ் கூட்டு ராணுவ பயிற்சி:
இதற்கிடையே கடந்த இரு தினங்களாக இந்திய-அமெரிக்க ராணுவத்தினர் உத்தரப் பிரதேசத்தில் மாபெரும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு நாடுகளையும் சேர்ந்த சுமார் 1,000 வீரர்கள் இரு நாடுகளின் போர் விமானங்கள், டாங்கிகள், விமானியில்லா உளவு விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் பாபினா பகுதியில் இந்த பயிற்சி நடக்கிறது. 18 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சிக்கு 'யுத் அபியாஸ்' (போருக்கு தயாராகுங்கள்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஆக்ராவில் இரு நாட்டு விமானப் படைகளும் கூட்டுப் பயி்ற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications