தமிழகத்தில் மழைக்கு இதுவரை 70 பேர் பலி!
சென்னை: தமிழகம் முழுவதும் மழை, வெள்ளத்திற்குப் பலியானோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.
இதில் நீலகிரி மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. அனைவரும் நிலச்சரிவுகளில் சிக்கிப் பலியானவர்கள் ஆவர். தமிழகம் முழுவதும் பிற பகுதிகளில் 31 பேர் இறந்துள்ளனர்.
நேற்று இரவு மட்டும் தமிழகத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவாரூர், விழுப்புரத்தில் ஐந்து பேர் இறந்துள்ளனர். திண்டுக்கல், நெல்லையில் தலா 3 பேர், ராமநாதபுரம், விருதுநகர், வேலூர், கடலூர் ஆகிய இடங்களில் தலா 2 பேர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், மதுரை, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.
மழை, இடி, மின்னல், வெள்ளம், சுவர் இடிந்தது, மின் தாக்குதல், நிலச்சரிவு காரணமாக இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன.
அடையாற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேர்:
இதற்கிடையே, சென்னை அடையாறு வெள்ளத்தில் 2 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
சென்னை புறநகர்ப் பகுதிகளான அனகாபுத்தூர், பொழிச்சலூர், நந்தம்பாக்கம் பகுதிகளில் கன மழை பெய்து வந்ததால், அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மேற்கண்ட பகுதிகளில் கரையோரம் வசித்து வரும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிசைகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
இந்த நிலையில், கவுல் பஜார் இந்திரா நகர் தரைப்பாலம் தற்போது வெள்ளத்தில் மூழ்கி விட்டது. அதில் நேற்று ராஜா என்ற 45 வயது நபர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
ஆற்றில் சிக்கிய மாட்டை அவர் மீட்க முயன்றபோது, அடித்துச் செல்லப்பட்டார். இதையடுத்து தாம்பரம் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் போனது. இதுவரை ராஜா கிடைக்கவில்லை.
அதேபோல நந்தம்பாக்கம் பகுதியில் இன்னொரு ராஜா என்ற வாலிபர் ஆற்று வெள்ளத்தில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்டார்.
தமிழகத்தின் முக்கிய அணைகளின் நீர்மட்டம்:
தமிழகத்தின் முக்கிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் இன்றைய நீர் இருப்பு விவரம்...
அணை- முழுக் கொள்ளளவு- நீர் இருப்பு- நீர்வரத்து
மேட்டூர் அணை- 120 அடி- 78.95 அடி- 11,215 கன அடி
பவானி சாகர்- 105- 79.21- 26137
அமராவதி- 110- 96.22- 4522
பெரியாறு- 152- 131.8- 6243
வைகை- 71- 67.32- 7344
பாபநாசம்- 143- 109.05- 4376
மணிமுத்தாறு- 118- 94- 2360
பேச்சிப்பாறை - 48 - 28.8 - 827
பெருஞ்சாணி - 77 - 51.4 - 772
கிருஷ்ணகிரி - 52 - 48.95 - 427
சாத்தனூர் - 119 - 90.09 - 1435
சோலையாறு - 160 - 151.94 - 643
பரம்பிக்குளம் - 72- 71.9 - 859
ஆழியார் - 120 - 119.8 - 1132
திருமூர்த்தி - 60 - 44.05 - 251
சென்னை நகர நீர்த்தேக்கங்கள்:
பூண்டி - 35 - 28.78 - 938
சோழவரம் - 17.86 - 10.13 - 535
செங்குன்றம் -21.2 - 12.03 - 726
செம்பரம்பாக்கம் - 24 - 14.05 - 1116
வீராணம் - 8.5 - 4.7 - 1000
7 மாவட்டங்களில் பள்ளிகள்-கல்லூரிகள் மூடல்:
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை குறைய தொடங்கியபோதும் ஒருசில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் மழை பாதிப்பு அதிகமாக உள்ளது. அதனால் அந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.