ஆசிரியர் சில்மிஷம்-பெற்றோர்கள் போராட்டம்
நெல்லை: சுரண்டை அருகே மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷம் செய்ததாக பிரச்சனை எழுந்ததை தொடர்ந்து குழந்தைகளை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே கேஎம் அச்சம்பட்டியில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
அருகில் உள்ள மீனாட்சிபுரத்தில் இருந்து மட்டும் 110 பேர் படிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவரிடம் பள்ளி ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பிரச்சனை எழுந்தது.
இந்த விவகாரம் மீனாட்சிபுரம் கிராம மக்களுக்கு தெரிய வரவே அவர்கள் பள்ளி ஆசிரியரை மாற்ற கோரியும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும், மீனாட்சிபுரம் மக்கள் கல்வி துறை அதிகாரிகளை சந்தித்து தங்கள் பகுதியில் பள்ளி அமைத்து குழந்தைகளுக்கு கல்வி பெற ஏற்பாடு செய்ய வேண்டுமேன கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து கிராம மக்கள் தங்கள் குழந்தைகள் 93 பேரின் மாற்று சான்றிதழை பள்ளியில் இருந்து வாங்கினர். நேற்று அந்த மாற்று சான்றிதழ்களுடன் ஊர் மக்கள் சிலர் நெல்லையில் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். உடனடியாக தங்களது பகுதியில் பள்ளி அமைத்து கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.