'தலப்பாக்கட்டு' பெயரை பயன்படுத்த பிரியாணி கடைகளுக்கு தடை
சென்னை: பிரியாணி கடைகள் 'தலப்பாக்கட்டு' என்ற பெயரை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றும் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
திண்டுக்கல்லில் உள்ள 'தலப்பாக்கட்டு நாயுடு ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல்' பங்குதாரர் நாகசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், 'திண்டுக்கல் நகரில், நாகசாமி நாயுடு என்கிற தலப்பாக்கட்டி நாயுடு என்பவர் 1957ம் ஆண்டு பிரியாணி கடையை துவக்கினார். நாகசாமி நாயுடு மறைந்த பிறகு, அவரின் மகன் தனபாலன், தலப்பாக்கட்டி நாயுடு பிரியாணி கடையை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இந்த பெயருள்ள பிரியாணி, பொதுமக்கள் மத்தியில் புகழ் பெற்றது. கொடைக்கானல், மதுரை செல்லும் சுற்றுலாப் பயணிகள், இந்த பிரியாணியை வாங்கி சாப்பிட்டு செல்வது வழக்கம். எனவே, இந்த 'தலப்பாக்கட்டி' என்ற பெயர் எங்களுக்கு சொந்தமானது.
ஆனால், தற்போது 'தலப்பாக்கட்டு பிரியாணி' என்ற பெயரை பயன்படுத்தி வருகின்றனர். சென்னையில் பிரியாணி கடைகள் பல, 'தலப்பாக்கட்டு' பெயரை பயன்படுத்தி வருகின்றன. இந்த பெயரை பயன்படுத்த எங்களுக்குத் தான் உரிமை உள்ளது.
எனவே, மற்றவர்கள் 'தலப்பாக்கட்டு' என்ற பெயரை பயன்படுத்த தடை விதிக்கவேண்டும். ஏற்கனவே இதுதொடர்பான எங்கள் மனவை ஏற்று உயர்நீதிமன்றமும் இடைக்கால தடை விதித்தது.
தற்போது, சென்னையில் பல பகுதிகளில் 'தலப்பாக்கட்டு' பெயரை 16 கடைகளில் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, 'தலப்பாக்கட்டு' என்ற பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து, சென்னையில் உள்ள குறிப்பிட்ட 16 கடைகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.