26/11 நினைவு தினம்- நாடு முழுவதும் உஷார்
மும்பை: மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி இரவு தொடங்கி 28ம் தேதி வரை நீடித்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் வெறிச் செயல் நாட்டை மட்டுமல்லாது உலகையும் அதிர வைத்தது.
உலகில் அதுவரை அப்படி ஒரு தாக்குதல் எந்த நாட்டிலும் நடந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு அதன் தாக்கம் இருந்தது.
இந்த சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு முடிகிறது. இதையொட்டி நாடு முழுவதும் இன்று மும்பை சம்பவத்தில் உயிர் நீத்த அப்பாவி மக்கள், மக்களைக் காக்க உயிர்த் தியாகம் செய்த கமாண்டோப் படையினர், காவல்துறையினர் ஆகியோரை நினைவு கூறும் நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு- கண்காணிப்பு...
மும்பை சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள், மும்பை தாக்குதலை நடத்தினார்கள். மீண்டும் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறக்கூடும் என்று உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து இருப்பதால், நாடு முழுவதும் கடலோர பகுதிகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன.
தமிழகத்தில்...
தமிழ்நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் ஏறத்தாழ 1000 கிலோ மீட்டர் நீளமுள்ள கடலோர பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 12 கடலோர போலீஸ் நிலையங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. ரோந்து படகுகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழக கடலோர காவல் குழுமத்துக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் (1093) வழங்கப்பட்டு உள்ளது. கடலோரங்களில் ஏற்படும் ஊடுறுவல்கள் குறித்து அறியவந்தால் இந்த எண்ணை அழைத்துத் தெரிவிக்கலாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை அருகே உள்ள கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள அணு மின்நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
தென் கிழக்கு கடலோர பகுதியில் ஊடுருவலை முறியடிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை போர் கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. உச்சிப்புளியில் உள்ள கடற்படை விமான தளமும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
பாக் ஜலசந்தி மற்றும் இந்திய கடல் பகுதியில் அதிவேக படகுகள் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஐ.என்.எஸ். பருந்து' என்ற கடற்படை விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடலோர ரோந்து பணிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கிரீஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்டுள்ள ரூ.2 கோடி மதிப்புள்ள உயர் தொழில்நுட்ப படகும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.
மீனவர்கள் தங்கள் அடையாள அட்டைகளை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக சர்வதேச கடல் எல்லையை தாண்டிச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.