நாகர்கோவில் அருகே சர்ச்சில் குண்டு வெடிப்பு - பாதிரியாரைக் கொல்ல சதி
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே சர்ச்சில் குண்டு வெடித்தது. இது அந்த சர்ச்சின் பாதிரியாரைக் கொல்ல நடந்த சதியா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாகர்கோவில்-ராஜக்கமங்கலம் அருகே உள்ளது தம்மத்துகோணம். இங்கு சிஎஸ்ஐ சர்ச் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 8 மணி வரை பாடகர் குழு பயிற்சி எடுத்தது. பின்னர் சர்ச்சை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை 7.30 மணிக்கு சர்ச்சை திறக்க ஊழியர்கள் வந்தனர்.
அப்போது சர்ச்சில் பாதிரியார் அறை சுவரின் வெளிப்புறத்தில் பெரிய துளை காணப்பட்டது. அறை முழுவதும் மண் சிதறியும், பிளாஸ்டிக் இருக்கை சேதமடைந்தும் காணப்பட்டது. திரி உள்பட வெடிபொருட்கள் நாலாபுறமும் சிதறி கிடந்தன. அங்குள்ள கழிவுநீர் குழாயில் வெடிகுண்டு வைக்கப்பட்டு அது வெடித்து சிதறியது தெரிய வந்தது.
தகவல் அறிந்ததும் ராஜாக்க மங்கலம் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வந்து பார்வையிட்டனர். அதிகாலை 2 மணியளவில் வெடி சத்தம் கேட்டதாகவும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் அங்கு யாரும் செல்ல முயலவில்லை என்றும், அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து சர்ச் செயலர் ஜெபசிங் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாதிரியார் அறைக்கு அருகே குண்டு வீசப்பட்டுள்ளதால் அவரை கொல்ல நடந்த சதியா அல்லது சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சதியா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications