தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு கருணாநிதி தலைமையில் குழு
சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுத் தலைமைக் குழு முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைக்ப்பட்டுள்ளது. இதில் மு.க.ஸ்டாலின் இடம் பெற்றுள்ளார். அதேபோல, இணைய மாநாட்டுக் குழுவில் கவிஞர் கனிமொழி இடம் பெற்றுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தலைமைக் குழு, சிறப்பு மலர்க் குழு மற்றும் தமிழ் இணைய மாநாட்டு குழு ஆகியவற்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
கோவை மாநகரில் 2010-ம் ஆண்டு ஜுன் மாதம் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி ஏற்கனவே ஆய்வரங்க அமைப்புக் குழு மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாநாடு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஒப்புதல் அளிக்கவும், அறிவுரைகள் வழங்கவும் முதல்வர் தலைமையில் மாநாட்டுத் தலைமைக் குழு பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளது.
தலைவர்-முதல்வர் கருணாநிதி, துணைத் தலைவர்கள்-அமைச்சர் க.அன்பழகன், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், உலகத் தமிழாய்வுக் கழக துணைத் தலைவர் முனைவர் வா. செ.குழந்தைசாமி, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உறுப்பினர்கள்- தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, நிதித் துறை முதன்மைச் செயலர் கு. ஞானதேசிகன், அமைப்பாளர்- உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தனி அலுவலர் கா.அலாவுதீன்.
மேலும், இம்மாநாட்டினையொட்டி சிறப்பு மலர் வெளியிடுவதற்காக நிதியமைச்சர் க.அன்பழகன் தலைமையில் சிறப்பு மலர்க் குழு ஒன்று பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளது.
தலைவர்-நிதி அமைச்சர் க.அன்பழகன், துணைத் தலைவர்கள்-மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர் மு.நாகநாதன், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திருவாசகம், முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன்.
உறுப்பினர்கள்- உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கரு.அழ.குணசேகரன், சென்னை வானதி திருநாவுக்கரசு, சென்னை பூம்புகார் பிரதாப்சிங், ஒருங்கிணைப்பாளர்-தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கூ.வ.எழிலரசு.
இது தவிர உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக உத்தமம் எனப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்துடன் இணைந்து தமிழ் இணைய மாநாடு நடத்தவும், முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் பின்வருமாறு தமிழ் இணைய மாநாட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தலைவர்- கான்பூர் ஐ.ஐ.டி.தலைவர் பேராசிரியர் மு.ஆனந்த கிருட்டிணன், அமைப்பாளர்-அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, ஒருங்கிணைப்பாளர்-தகவல் தொழில் நுட்ப துணை செயலர் டேவிதார், உறுப்பினர்கள்-மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குநர் முனைவர் பி.ஆர்.நக்கீரன், மத்திய அரசு தேசிய தகவல் மையம் மோகன், உத்தமம் துணைத் தலைவர் டி.என்.சி.வெங்கடரங்கன், கணினி தமிழ்ச் சங்கம் ஆன்டோ பீட்டர், இந்திய மொழிகளின் தொழில் நுட்ப மேம்பாடு, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக இயக்குனர் ஸ்வரன் லதா, தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண்மை இயக்குனர் டாக்டர் சந்தோஷ் பாபு.
இக்குழுவினர் தங்களுடைய பணிகளை உடனடியாக தொடங்கி முனைப்புடன் மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.