ரூ. 5,000 கட்டினால் 25,000: மோசடி செய்த தாய், மகள் கைது
சென்னை: பணத்தை 5 மடங்கு அதிகரித்து தருவதாக 200க்கும் மேற்பட்டவர்களிடம் மோசடி செய்த தாய், மகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அசோக்நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (65). இவர் மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னையில் குடியேறியவர். இவரது கணவர் சங்கரநாராயணன் திருச்சியை சேர்ந்தவர். இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் சங்கர நாராயணன் பணியாற்றி வந்தார்.
லட்சுமி, சங்கரநாராயணன் மற்றும் அவர்களின் இளைய மகள் சங்கீதா ஆகியோர் மட்டும் அசோக் நகரில் வசித்து வந்தனர். இவர்கள் தங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகவும், அதை ஏழைகளுக்கு செலவு செய்வதாகவும் அக்கம்பக்கத்தில் கூறிவந்தனர்.
மேலும், பணத்தை அதிகரிப்பதற்கு தன்னிடம் பல திட்டங்கள் இருப்பதாக லட்சுமியும், சங்கீதாவும் கூறினர். ரூ.5 ஆயிரம் கொடுத்தால் 4 மாதங்களுக்கு பிறகு அதை 5 மடங்கு உயர்த்தி ரூ.25 ஆயிரமாக தருவதாக கூறினர்.
இதை நம்பி, இவர்களின் வீ்ட்டில் வேலை செய்யவந்த அம்பிகா, தனது தரப்பில் ரூ.25 ஆயிரம் செலுத்தியது மட்டுமல்லாமல், மேலும் 200 பேரை இந்த திட்டத்தில் சேர்த்துவிட்டார். பலரும் தங்கள் வசதிக்கு ஏற்ப ரூ.5 ஆயிரம், ரூ.12ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.1.10 லட்சம் என்று பணம் முதலீடு செய்தனர்.
இந்த வகையில் மொத்தம் ரூ.42 லட்சம் கிடைத்தது. சங்கீதாவும், லட்சுமியும் ஆடம்பரமாக செலவு செய்தனர். மீதமிருந்த ரூ.22 லட்சத்தை ஆன்-லைன் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்தனர். அதில் கிடைக்கும் தொகையின் ஒரு பகுதியை தங்களுக்கு எடுத்துக் கொண்டு மீதியை முதலீட்டாளர்களிடம் திருப்பித்தரலாம் என்று நினைத்திருந்தனர்.
ஆனால் பங்கு சந்தையில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து உறுதி அளித்த தொகையை திருப்பி செலுத்த முடியாமல் போய்விட்டது. பணம் கொடுத்தவர்கள் அனைவரும் சங்கீதா மற்றும் லட்சுமியிடம் பணத்தை திருப்பி கேட்டனர்.
இவர்களால் பணத்தை திருப்பித்தர முடியவில்லை. எனவே அவமானம் தாங்காமல் சங்கரநாராயணன் கடந்த 2008ம் ஆண்டு ஜுலை மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
அதன் பிறகு லட்சுமியும், சங்கீதாவும் வேறு ஒரு இடத்தில் வீடு எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டனர். எனவே இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் அம்பிகா புகார் கொடுத்தார். போலீசார் விசாரணையில் இவர்கள் இருவரும் கீழ்ப்பாக்கம் பகுதியில் தங்கி இருந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து சங்கீதா மற்றும் அவரது தாயார் லட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இதுவரை வந்துள்ள புகாரின் அடிப்படையில் ரூ.3 லட்சம் மோசடி விவரம் தெரியவந்துள்ளது. ஏமாந்த அனைவரது பணத்தையும் சேர்த்தால் ரூ.42 லட்சம் வரும் என போலீசார் கூறினர்.