மாயாவதிக்கு ரூ.1 கோடி நோட்டு மாலை!
பகுஜன் சமாஜ் கட்சியின் 25வது ஆண்டு தினம் நேற்று லக்னோவில் மகா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மகா பேரணியும் நடத்தப்பட்டது.
இதை விட முக்கியமாக நிகழ்ச்சியில் பிரமாண்டமான மாலை ஒன்றை பகுஜன் கட்சியினர் மாயாவுக்கு அணிவித்தனர். படு வித்தியாசமாக இருந்த அந்த மாலை பூக்களால் செய்யப்பட்டதல்ல. மாறாக ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மடித்தும், மடக்கியும், சுருட்டியும் வைத்து மாலையாக கோர்த்திருந்தனர்.
கிட்டத்தட்ட ரூ. 1 கோடி அளவிலான ரூபாய் நோட்டுக்கள் இதில் இடம் பெற்றிருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மகா ஆடம்பர நிகழ்ச்சி உ.பி எதிர்க்கட்சிகளை உசுப்பி விட்டுள்ளது.
வெள்ளி விழா நிகழ்ச்சிக்காக மக்கள் வரிப்பணத்திலிருந்து ரூ. 200 கோடி வரை மாயாவதி கட்சியினர் வாரியிறைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் பாய்ந்துள்ளன.
இதுகுறித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் சிவபால் சிங் யாதவ் கூறுகையில், இந்த ஆடம்பர நிகழ்ச்சி குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மேலும், மிகப் பெரிய ரூபாய் நோட்டு மாலையையும் பகிரங்கமாக மாயாவதிக்கு அணிவித்துள்ளனர். இதுகுறித்தும் விரிவாக விசாரிக்க வேண்டும் என்றார்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று லோக்சபாவில் இதுகுறித்து பிரச்சினை எழுப்பினார். அவர் கூறுகையில், பரேலி ஒரு பக்கம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் மாயாவதி அரசோ மக்கள் பணத்திலிருந்து ரூ. 200 கோடியை வாரியிறைத்து ஆடம்பர விழாவை நடத்திக் கொண்டிருக்கிறது என்றார்.
இதேபோல பாஜக, காங்கிரஸ் கட்சியினரும் மாயாவதி கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பரேலிக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.