பாகிஸ்தானுடன் இதுவரை அணு சக்தி ஒப்பந்தம் செய்யப்படவில்லை- அமெரிக்கா
டெல்லி: இந்தியாவைப் போல பாகிஸ்தானுடன் இதுவரை அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் எதையும் மேற்கொள்ளவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இந்தியாவுடன் செய்து கொண்டதைப் போன்ற சிவில் அணு சக்தி ஒப்பந்தம் ஒன்றை பாகிஸ்தானுடனும் அமெரிக்கா செய்து கொள்ளும் என செய்திகள் அடிபடத் தொடங்கியுள்ளன.
இந்தியாவில் ஒரு காலும், பாகிஸ்தானில் ஒரு காலும் வைப்பது அமெரிக்காவுக்குப் புதிதில்லை என்பதால் இந்த செய்தி குறித்து இந்தியா கவலையுடன் உள்ளது.
இந்த நிலையில், அப்படி எந்தத் திட்டமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தானுடன் சிவில் அணு சக்தி ஒப்பந்தம் எதையும் அமெரிக்கா இதுவரை செய்து கொள்ளவில்லை. பாகிஸ்தானின் எரி சக்தி தேவைகளை பூர்த்தி செய்வதில் அமெரிக்கா உதவிகளைச் செய்து வருகிறது. அதேசமயம், அணு சக்தி ஒப்பந்தத்தை அது மேற்கொள்ளவில்லை. அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்றார்.
ஆனால் பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் ஆனி பேட்டர்சனோ வேறு மாதிரியாகப் பேசுகிறார். பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அணு சக்தி மின்சாரம் தொடர்பான பாகிஸ்தானின் விருப்பம் குறித்து அந்த நாட்டு அரசுடன் நாங்கள் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளோம்.
இந்த மாதத்தில் இதுதொடர்பாக வாஷிங்டனில் ஒரு விவாதம் நடைபெறவுள்ளது. முன்பிருந்ததைப் போன்ற கடுமையான நிலை தற்போது இல்லை என்று கருதுகிறோம். எனவே அணு சக்தியை பயன்படுத்துவது தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று கூறியுள்ளார் ஆனி.
அமெரிக்காவின் இந்த டபுள் டாக் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பதிலளிக்கையில், அமெரிக்கா எதைச் செய்தாலும் பாகிஸ்தானின் முந்தைய செயல்பாடுகளையும், வரலாறுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அது இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இதற்கிடையே, அடுத்த மாதம் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா செல்லவுள்ளார். அப்போது இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் அடுத்த கட்டம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications