ராஜபக்சேவின் இந்திய வருகை ஒருமைப்பாட்டு சுவரை பாதிக்கும்- வைகோ

இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் திங்கள்கிழமை கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். பாமகவினர் யாரும் இக்கூட்டத்திற்கு வரவில்லை. இந்த அமைப்பை உருவாக்கியதே அவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு வராமல் தனியாக டாக்டர் ராமதாஸ் தலைமையில் அவர்கள் தனிக் கூட்டம் போட்டு மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல் தெரிவித்துக் கொண்டனர்.
நேற்றைய கூட்டத்தில் வைகோ பேசுகையில்,
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி ஒருபோதும் ஒன்றிணைய முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
இலங்கையில் நடக்கும் தமிழர்கள் படுகொலை ஒரு இனப் படுகொலை என்று 1983 ம் ஆண்டில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி கூறினார்.அவரே,1984 ஆகஸ்ட்டில் நாடாளுமன்றத்தில் பேசும்போது, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி தமிழர்களின் பூர்வீக பூமி,அது தமிழர்களின் பூமி என்று குறிப்பிட்டார்.
அத்தகைய பூமியில் தமிழர்களுக்கு உரிமை இல்லை என்று கூறும் ராஜபக்சே ஜூன் 8 ம் தேதி இந்தியா வருகிறார்.அவரது ஒவ்வொரு இந்திய வருகையும்,அவருக்கு இங்கு அரசால் அளிக்கப்படும் ஒவ்வொரு வரவேற்பும், இந்திய ஒருமைப்பாடு என்னும் மாபெரும் சுவரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் தனி ஈழப் போர் இன்னும் முடியவில்லை. விரைவிலேயே அடுத்த கட்டப் போர் தொடங்கும். உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்கள் அந்தப் போர்க்களம் நோக்கிச் செல்வார்கள். அப்போது தமிழகத்திலிருந்தும் அந்தப் போர்க்களம் நோக்கிச் செல்ல வாலிபர்கள் தயாராக வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலையை பொறுத்துக் கொள்ள முடியாத இளைஞர் முத்துகுமார் கடந்த ஆண்டு தீக்குளித்து உயிரிழந்தார்.அவரது மரணம் உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியது.
அந்த இளைஞரின் தியாகத்தைப் போற்றும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம்,செங்கிப்பட்டியில் தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சி சார்பில் அவரது சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால்,அதற்குக் காவல் துறையினர் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்துள்ளனர். தனியாருக்குச் சொந்தமான இடத்தில்,முத்துகுமாருக்கு சிலை அமைப்பதை தடுப்பது ஏன் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications