சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி-பாஜக

கோவை ராமநாதபுரத்தில் பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழக அரசு சார்பில்தான் நடத்தப்படுகிறது. அது திமுக மாநாடாக இருந்திருந்தால் பாஜக பங்கேற்றிருக்காது. தமிழர்களின் மாநாடாக இருப்பதால் பங்கேற்கிறது.
தமிழகத்தில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் படிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். இது தமிழக தமிழர்களுக்கு இருக்கும் பிரச்னை. பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்களது பண்பாடு, கலாசாரத்தை பாதுகாக்கவே தடுமாறி வருகின்றனர். ஒவ்வொரு இடத்தில் இருக்கும் தமிழர்களுக்கும் வெவ்வேறு வகையில் பிரச்சனைகள் உள்ளன. இவற்றுக்கு தீர்வு கிடைக்க கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பாஜக குரல் கொடுக்கும்.
முல்லைப் பெரியாறு போன்ற அண்டை மாநில நதி நீர்ப் பிரச்சனைகள் தொடர்பாக இரு மாநில அரசுகளும் பேச்சு நடத்த வேண்டும்.
ஒகேனக்கல் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால், திட்டப் பணிகள் துவக்கப்பட்ட இடம்தான் சர்ச்சைக்குரியது என்று கர்நாடகத்தில் குரல் எழும்பியுள்ளது. ஆனால், ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பணிகள் துவக்கப்பட்ட இடம் தமிழகத்துக்குச் சொந்தமானதுதான்.
அதே நேரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அங்கிருந்த முதல்வர், கட்சிகள் தெரிவித்த கருத்துக்கும், இப்போதுள்ள முதல்வர் மற்றும் கட்சிகள் தெரிவிக்கும் கருத்துக்கும் வேறுபாடு உள்ளது என்றார் கணேசன்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், கல்வி நிறுவனங்களில் மதரீதியாக மாணவர்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ஜூலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் உதவித் தொகைக்கான படிவத்தில் வருமானம் குறித்த எவ்விதத் தகவலும் கேட்கப்படவில்லை. ஆனால், இந்து மாணவர்களுக்கு வருமானம் அடிப்படையிலேயே, அதுவும் மிகவும் குறைவான மாணவர்களுக்கே, குறைவான தொகையே உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இது மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துகிறது.
முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், பிற மதத்தினருக்கும் அதேபோல வழங்க வேண்டும். இல்லையெனில் பொருளாதார அடிப்படையில் உதவித் தொகையை நிர்ணயிக்க வேண்டும்.
வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும். அதற்கான ஆயத்த பணிகளைத் துவக்கியுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications