அரபிக் கடலில் புயல் சின்னம்: வங்கக் கடலில் வளிமண்டல மேல் சுழற்றி- கன மழை, பலத்த காற்று
தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்வதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந் நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வங்கக் கடலில் தென் மேற்கு பகுதியில் வளிமண்டல அடுக்கில், சுழற்சி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக பலத்த காற்றுடன கன மழை பெய்யும்.
காற்றின் வேகம் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
காற்றுடன் கூடிய மழையின்போது இடியும், மின்னலும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பலத்த மழை
இதற்கிடையே, சென்னை உள்பட வட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலை பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. அரக்கோணத்தில் இடி விழுந்து ஒருவர் பலியானார்.
சென்னையில் தொடர்ந்து விட்டு விட்டுமழை பெய்துவருவதால் பல சாலைகளில் தண்ணீர் ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை நகரில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலையில்,பலத்த காற்றுடன் திடீரென மழை பெய்யத் தொடங்கியது.
நகரின் பெரும்பாலான பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இந்தமழை பெய்தது.இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல ஓடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காலையில் பள்ளிகளுக்குச் சென்றோர் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
இந்த மழைகாரணமாக சென்னை நகரில் வெப்பம் அடியோடு குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு:
மெரீனா கடற்கரைப்பகுதியில் இன்று கடல் சீற்றம் அதிகம் காணப்பட்டது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பெரிய அலைகளும் வந்தவண்ணம் இருந்தன. திருவொற்றியூர், பட்டினப்பாக்கம், காசிமேடு, பகுதிகளில் வழக்கத்தை விட கடல் தண்ணீர் அதிக அளவில் கரைக்கு வந்தது.
வெப்பச் சலனம் காரணமாகவே இந்தமழை பெய்ததாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை தவிர காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் இன்று இடியுடன் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. வேலூர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. அரக்கோணத்தில் இடி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
குமரியில் சூறைகாற்று-வாழைகள் சேதம்:
குமரி மாவட்டத்தில் சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மரக் கிளைகள் முறிந்து மின்தடை ஏற்பட்டது. மேலும் 10க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. பல இடங்களில் ஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து விழுந்தன.
குளச்சல் பகுதியிலும் பலத்த சூறைக் காற்று வீசியது. ரீத்தாபுரம் பேரூராட்சி தலக்கோட்டுவிளை ஏலாவில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ஓன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட நேத்திரம் வாழை மரங்கள் நடப்பட்டிருந்தன. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் சூறைக் காற்றில் சரிந்தன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.