விரைவில் வருகிறது ஹீரோ ஹோண்டாவின் சூப்பர் பைக்
முஞ்சால் குடும்பத்தினருக்குச் சொந்தமானது ஹீரோ ஹோண்டா குழுமம். தற்போது இந்த குழுமத்தின் கீழ் உள்ள 20 நிறுவனங்களை குடும்பத்தினருக்கு சரி அளவில் பிரித்துக் கொடுத்து விட்டனர்.
அதன் படி இந்தியாவின் No. 1 இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ ஹோன்டா நிறுவனம் பிரிஜ்மோகன் லால் முஞ்ஜாலால் நிர்வகிக்கப்படும். இதன் இணை உரிமையாளர்களாக முஞ்சாலின் மகன்களான பவன் கன்ட், சுனில் கன்ட், சுமன் கன்ட் மற்றும் மறைந்த ரமன் கன்ட் குடும்பத்தார்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தை பங்கஜ் முஞ்சால் நிர்வகிப்பார். இவர், பிரிஜ்மோகன் லாலின் உறவினர் ஆவார்.
தற்போது பங்கஜ் முஞ்சால், சூப்பர் பைக்குகளை தயாரிக்க களம் இறங்கியுள்ளார். இதற்காக ஹார்லி டேவிட்சன் போன்ற பிரபல நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறார்.
இந்தியாவில் ஏற்கனவே சில சூப்பர் பைக்குகள் பிரபலமாக உள்ளன. சுசுகி ஹயபூசா, ஹோன்டா சி.பி.1000ஆர்.ஆர் மற்றும் நின்ஜா 250சிசி போன்ற சூப்பர் பைக்குகள் ஆகியவை ஹிட்டான சூப்பர் பைக்குகள் ஆகும்.
இந்திய மோட்டார் சைக்கிள் நல்ல வளர்ச்சியைக் கண்டு வருவதால் இங்கு வந்து கடை திறக்க பல்வேறு உலகின் முன்னணி நிறுவனங்கள் ஆவலாக உள்ளன. ஏற்கனவே ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது 12 மாடல்களை இந்தியாவின் முக்கிய நகரங்களில் களம் இறக்கியுள்ளது.
சூப்பர் பைக் தொடங்குவதில் ஆர்வம் கொண்டுள்ள ஹீரோ மோட்டார்ஸ், நிறுவனம் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தை வாங்கும் யோசனையிலும் உள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த என்.எம்.ரோத்ஸ்சைல்ட் வங்கியை அது நியமித்துள்ளது.
ஹீரோ மோட்டார்ஸின் ஒரு பிரிவுதான் ஹீரோ சைக்கிள்ஸ். ஹீரோ மோட்டார்ஸுக்கு பெரும் பக்க பலமாக இருப்பது இந்த ஹீரோ சைக்கிள்ஸ் பிரிவும்தான்.
சூப்பர் பைக் திட்டத்துக்காக ஹீரோ மோட்டார்ஸ் ரூ. 500 கோடியை முதலீடு செய்யவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.