பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
மதுரை: விவசாயிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஜூன் 29 ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில், நில உச்சவரம்பு சட்டம் குழி தோண்டி புதைக்கப்பட்டு, நிலக்குவியல் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு நடைபெற்று வருகிறது. நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலம் சுமார் 5000 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டம் பெரியம்மாபட்டியில் செல்வாக்கு மிக்கவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் நிலம் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு கடந்த 40 ஆண்டு காலமாக பட்டா வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் இதர சமூகத்தைச் சார்ந்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை மீட்க போடப்பட்ட உத்தரவுகள் ஏட்டளவிலேயே உள்ளது.
விவசாயிகளுக்கு சொந்தமான பட்டா நிலம் அவர்களுக்கு தெரியாமலேயே தூத்துக்குடி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் மோசடியாக பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசு தரிசு நிலங்கள் பல நூறு ஏக்கர்கள் பல பெரிய மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், காவேரி ராஜபுரத்தில் நீதிபதி பி.டி. தினகரனால் 200 ஏக்கர் ஆக் கிரமிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்ட பிறகும் இதை மீட்க தமிழக அரசு சிறிய முயற்சி கூட எடுக்கவில்லை.
வனஉரிமைச்சட்டத்தை அமல்படுத்தி, ஆதிவாசி மக்களுக்கும் வனத்தைச் சார்ந்து வாழும் மற்றவர்களுக்கும் பட்டா வழங்க அரசு முன்வர வேண்டும்.
இந்த நிலையில் பட்டா நிலத்தில் உள்ள குடிசை வீடுகளை மட்டுமே கான்கிரிட் வீடுகளாக மாற்றித் தரப்படும் என அரசு ஆணையிட்டுள்ளது.
எனவே, அனைத்து வகையான புறம்போக்கு நிலத்தில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்கி, கான்கிரிட் வீடு கட்டித்தர வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அதே போன்று, திருநெல்வேலி, தூத்துக்குடி , சிவகங்கை, தேனி , காஞ்சிபுரம், விழுப்புரம், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.