வனத்துறை அதிகாரி மீது மனைவி 'ஹோமோ செக்ஸ்' புகார்
மதுரை: கார் டிரைவரால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட வனத்துறை அதிகாரியின் மனைவி, நீதிமன்றத்தில் ஆஜராகி தனது கணவர் மீது 'ஹோமோ செக்ஸ்' புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்ட வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் சீனிவாச ரெட்டி. இவரது மனைவி லாவண்யா (32). இந்த தம்பதிக்கு மாதவ், பிரியங்கா என்று 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த லாவண்யாவை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வனத்துறையில் பணியாற்றி வரும் கார் டிரைவர் சாகுல் ஹமீது கடத்தி சென்று விட்டதாக சீனிவாச ரெட்டி தேனி போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகுல் ஹமீதையும், லாவண்யாவையும் தேடி வந்தனர். இந் நிலையில் சாகுல் ஹமீது முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி மாலா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சீனிவாச ரெட்டியின் மனைவி லாவண்யாவும் நேரில் ஆஜராகி நீதிபதியிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில்,
எனது கணவர் சீனிவாச ரெட்டியின் செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை. அவர் ஒரு 'ஹோமோ செக்ஸ்' பிரியர். பல ஆண்களுடன் அவர் ஹோமோ தொடர்பு வைத்துள்ளார். அது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்தும் எந்தவித பலனும் இல்லை.
இதனால் எங்களுக்குள் சில ஆண்டுகளாகவே சுமூகமான உறவு இல்லை. எனது சொந்த ஊர் ஆந்திரா மாநிலத்தில் இருப்பதால் தேனியில் எனக்கு உறவினர்களோ, நண்பர்களோ யாரும் இல்லை.
கார் டிரைவர் சாகுலிடம் மட்டும் நான் நட்புடன் பேசி வந்தேன். இது டிக்காத எனது கணவர் என்னை தினமும் அடித்து உதைக்கிறார். கொலை மிரட்டலும் விடுத்தார்.
என்னை சாகுல் ஹமீது கடத்தவில்லை. அதனால் சாகுல் அமீதுக்கு எதிரான புகாரை விசாரிக்க வேண்டியதில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் லாவண்யா கூறியிருந்தார்.
மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி மாலா கடத்தல் புகார் கூறப்பட்ட சாகுல் ஹமீதுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கினார். அவர் அடுத்த 15 நாட்களுக்கு தேனி நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.