'சடசடவென' சரிந்து கொண்டிருக்கும் அதிமுக-ஸ்டாலின்
ராமநாதபுரம் & கோவை: 'சடசடவென' சரிந்து கொண்டிருக்கும் அதிமுகவை தூக்கி நிறுத்தும் முயற்சிகளில் ஒன்றாகவே கூட்டணி குறித்து ஜெயலலிதா பேசி வருகிறார் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ராமநாதபுரம் சோழந்தூர் பள்ளியில் காமராஜர் பிறந்த தின விழாவில் பங்கேற்க ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க திமுக சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியா முழுவதுமே மின்தடை பிரச்சனை நிலவி வருகிறது. மின் உற்பத்தியை விட தேவை அதிகமாக இருப்பதால் மின்தடை தவிர்க்க முடியாததாக உள்ளது.
மின்தடை தொடர்பாக முதல்வர் வரும் 19ம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். நெய்வேலியில் புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்கியதும் தமிழகத்தில் மின் தேவை பூர்த்தியடையும்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் மின் தட்டுப்பாடு குறைவாகலே உள்ளது. தமிழக அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளால் மின் தேவை முடிந்த அளவு சமாளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அதிமுக 'சடசடவென' சரிந்து கொண்டிருக்கிறது. இதை தடுத்து கட்சியை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். இதன் தாக்கத்தினால் தான் கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் கூட்டணி குறித்துப் பேசியுள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகி தற்போது ஏராளமான முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருகிறார்கள். விரைவில் இதை கண்டித்தும், அவ்வாறு சேருபவர்களை சேர்க்கும் திமுகவை கண்டித்தும் அந்தக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கீழக்கரை, புதிய தாலுகா தலைமையிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கீழக்கரையில் புதிய தாலுகா அலுவலகம் செயல்படத் தொடங்கும் என்றார்.
ஜெ சொல்வது தவறு-வீரபாண்டி ஆறுமுகம்:
இந் நிலையில் கோவை அருகே உள்ள வடவள்ளி, சுந்தராபுரம் ஆகிய இடங்களில் புதிய உழவர் சந்தைகள் திறப்பு விழாவில் பேசிய விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்,
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டதற்காக 50 நாடுகளில் இருந்து வந்திருந்த மொழியியல் அறிஞர்கள் தமிழக அரசுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஜெயலலிதா கோவையில் பொதுக் கூட்டம் நடத்தி தவறான தகவல்கள் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய காவிரி நீரைப் பெற தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்று தவறான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார்.
2001 முதல் 2006 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 267.25 லட்சம் மெட்ரிக்டன் உணவு தான் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் 2006 முதல் 2010 வரை 4 ஆண்டு திமுக ஆட்சியில் 353.81 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம், ரூ. 100 மதிப்புள்ள மளிகை பொருட்களை ரூ. 50க்கு மலிவு விலையில் ரேஷன் மூலம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களால் தமிழகத்தில் விலைவாசி உயர்வு தாக்கம் தெரியவில்லை என்றார்.