ரூ. 1 கோடியில் நடந்த குற்றால யாகத்தால் ரெட்டிகளுக்குப் பிரச்சினை தீர்ந்தது-தலைமை புரோகிதர்

தங்களை சுற்றிச் சூழ்ந்துள்ள பெரும் பிரச்சினைகளிலிருந்து தப்புவதற்காக குற்றாலத்தில் உள்ள மெளன சாமி மடத்தில் கடந்த 10 நாட்களாக ரெட்டி சகோதரர்கள் சார்பில் சிறப்பு யாகம் நடந்து வந்தது.
இந்த யாகத்தின் இறுதிநாளின்போது அமைச்சர்களான கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் குடும்பத்துடன் வருவார்கள் என கூறப்பட்டது. இன்று காலை அவர்கள் குற்றாலம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியானதால் குற்றாலத்தில் பரபரப்பு நிலவியது.
யாகம் நடந்து வரும் பகுதியில் பெரும் கூட்டம் கூடிவிட்டது. போலீஸார் உள்பட பலரும் குவிந்துவிட்டனர். ஆனால் ரெட்டி சகோதரர்கள் யாரும் வரவில்லை.
சகோதரர்கள் கருணாக ரெட்டி மற்றும் ஜனார்த்தன ரெட்டி இருவரும் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் ஹெலிகாப்டர்களில் கிளம்பவிருந்தனர். தென்காசியில் உள்ள ஐசி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இறங்க முடிவு செய்திருந்தனர். முன் அனுமதி இல்லாமல் இவ்வாறு வரக் கூடாது, மீறி வந்தால் கைது செய்வோம் என மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து தென்காசி வருவதை ரத்து செய்தனர் ரெட்டி சகோதரர்கள். இந்த நிலையில் ராஜாபாளையத்தைச் சேர்ந்த குவைத் ராஜா என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் ரெட்டி சகோதரர்களின் ஹெலிகாப்டர் இறங்கிக் கொள்ள அனுமதி வழங்கினார். இதையடுத்து அங்கு வந்திறங்கி கார் மூலம் குற்றாலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஜனார்த்தன ரெட்டியின் மனைவி லட்சுமி அருணா ரெட்டி உள்ளிட்ட நான்கு பேர் மட்டும் மதுரைக்கு தங்களது சொந்த ஹெலிகாப்டரில் வந்தனர். ஆனால் அங்கிருந்து ராஜபாளையம் செல்வதற்கு வானிலை சரியில்லாத காரணத்தால் அந்தப் பயணத்தை ரத்து செய்து விட்டனர்.
மேலும், ஆந்திர மாநிலம் கடப்பாவில் இன்றுமாலை குடும்ப விழா ஒன்றில் பங்கேற்க வேண்டியுள்ளதால் குற்றாலம் வந்து விட்டு திரும்பிச்செல்ல தாமதமாகி விடும் என்பதாலும் ரெட்டி சகோதரர்கள் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 10 நாட்களாகவே ரெட்டி சகோதரர்களுக்காக யாகம் நடத்தப்பட்டுவந்தது. தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 1 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையும் மூன்று தடவை யாகம் நடைபெற்றது. இந்தப் பணியில் 40 புரோகிதர்கள் ஈடுபட்டிருந்தனர். இன்று பிற்பகலுடன் யாகம் முடிவடைந்தது.
யாகத்திற்கு பெல்லாரியைச் சேர்ந்த புரோகிதர் வேதாந்தி பான்டே என்பவர் தலைமை தாங்கி நடத்தினார். யாகம் நடந்த இத்தனை நாட்களும் இவர் எதற்காக யாகம் நடக்கிறது என்பதை தெரிவிக்காமல் ரகசியம் காத்து வந்தார். ரெட்டிகளுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்றும் கூறி வந்தார்.
ஆனால் இந்த யாகத்தால்தான் ரெட்டிகளை நெருங்கிய பிரச்சினை தீர்ந்தது என்று கூறியுள்ளார். யாகத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த யாகத்தின் பலனை ரெட்டி சகோதரர்கள் எட்டி விட்டனர். அவர்களை நெருங்கிய பிரச்சினை போய் விட்டது. இது யாகத்தின் பலனாகும் என்றார்.
ரூ. 1 கோடி செலவு
கடந்த 10 நாட்களாக நடந்து வந்த யாகத்திற்கு ரூ. 1 கோடி செலவாகியுள்ளதாம். தினசரி 50 பேருக்கு அன்னதானமும் செய்து வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications