பீகார் சட்டசபையில் பெரும் அமளி-சபாநாயகர் மீது செருப்பு வீச்சு-17 பேர் சஸ்பெண்ட்
பீகார் சட்டசபையில் நேற்று பெரும்அமளி ஏற்பட்டது. ஐக்கிய ஜனதாதள கட்சிக்கும், லாலு மற்றும் பாஸ்வான் கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டதால் சட்டசபையில் பெரும் அமளியானது. விலைவாசி உயர்வு, மத்தியஅரசின் தோல்விகள் குறித்து இந்த சண்டை மூண்டது.
இதையடுத்து இன்று சட்டசபையைச் சுற்றிலும் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
கடந்த 2002 முதல் 2008 வரை முறைகேடாக சுருட்டப்பட்ட ரூ. 11,000 கோடி குறித்து சிபிஐ விசாரணை நடத்தலாம் என பாட்னா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்தே இந்த அமளியில் லாலு மற்றும் பாஸ்வான் கட்சியினர் குதித்துள்ளனர்.
இதனால் நேற்றைய கூட்டம் பெரும் வன்முறையுடன் முடிந்தது. இந்த நிலையில் இன்றுகாலை அவை கூடியதும் பெரும் வன்முறை மூண்டது. பாஸ்வான், லாலு கட்சிகளைச் சேர்ந்தர்கள் சபாநாயகர் உதய் நரைன் செளத்ரியை நோக்கி செருப்புகளை கழற்றி சரமாரியாக வீசினர். இதில் பல செருப்புகள் சபாநாயகர் மீது வந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவை மார்ஷல்கள் வரவழைக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் வன்மு்றையில் ஈடுபட்டு அவையின் மாண்பைக் குலைக்கும் வகையில்நடந்து கொண்ட லாலு, பாஸ்வான் கட்சிகளைச் சேர்ந்த 17 பேரை கூட்டத் தொடர் முழுமைக்கும் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளத்தைச் சேர்ந்தவர்கள் 10 பேர். 2 பேர் பாஸ்வானின் லோக் ஜன சக்தியைச் சேர்ந்தவர்கள். மற்ற 5 பேரில் 2 பேர் சுயேச்சைகள், சிபிஐஎம், சிபிஐ எம் எல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் ஆவர்.
பூத்தொட்டியை உடைத்த பெண் எம்.எல்.ஏ
இந்தக் களேபரத்தின்போது ஜோதிதேவி என்ற பெண் எம்.எல்.ஏ அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டபோது, ஆத்திரத்தில், வளாகத்தில் இருந்த பூத் தொட்டிகளை தூக்கிப் போட்டு டமால் டமால் என உடைத்தார். இதைதக் தடுக்க காவலர்கள் முயன்றபோது அவர்கள் மீதும் வேகமாக வீசினார். தன்னைப் பிடிக்க வந்த பெண் காவலர்களையும் தாக்கி விரட்டினார்.
ஜோதி தேவி, ராட்சத தேவியாக மாறியதால் அரண்டு போன பெண் காவலர்கள் மொத்தமாக சேர்ந்து அவரை மடக்கிப் பிடித்து தூக்காத குறையாக தரதரவென இழுத்துச் சென்றனர். இதனால் அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டு விட்டது.