ராஜீவ் பேச்சைக் கேட்டிருந்தால் ஈழத் தமிழர்கள் அழிந்திருக்க மாட்டார்கள்-கார்த்தி சொல்கிறார்
சென்னை: ராஜீவ்காந்தி பேச்சை கேட்டிருந்தால், இலங்கை தமிழர்கள் இவ்வளவு பேர் அழிந்திருக்க மாட்டார்கள். இலங்கையில் 18 ஆண்டுகளுக்கு முன்னரே அமைதி திரும்பி இருக்கும் என்று பேசியுள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் நம்பர் டூ கோஷ்டியின் தலைவரான கார்த்தி சிதம்பரம்.
கூட்டம் போடாமல் வளர முடியாது:
சென்னை மந்தைவெளியில், காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் கார்த்தி பேசியதாவது:
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி கூட்டம் நடத்த தயங்கி வருகிறது. பொதுக்கூட்டம் நடத்தாமல் காங்கிரஸ் கட்சியால் தமிழ்நாட்டில் வளர முடியாது. காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சர்ச்சையை கண்டு அஞ்சக்கூடாது. தங்கள் நிலையை விளக்க வேண்டும்.
தமிழும், சிங்களமும் இணைந்து இருக்க முடியாதா?
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இலங்கை பிரச்சினையை பற்றி பேசுவதே கிடையாது. இந்தியாவில் பல மொழிகள் பேசுபவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அதுபோல, இலங்கையில் தமிழ், சிங்களம் ஆகிய 2 மொழிகள் பேசும் மக்கள் ஒற்றுமையாக இருக்கக் கூடாதா? என்று ராஜீவ்காந்தி கூறினார். இதில் என்ன தவறு இருக்கிறது.
ராஜீவ்காந்தி பேச்சை கேட்டிருந்தால், இலங்கை தமிழர்கள் இவ்வளவு பேர் அழிந்திருக்க மாட்டார்கள். இலங்கையில் 18 ஆண்டுகளுக்கு முன்னரே அமைதி திரும்பி இருக்கும். இலங்கை பிரச்சினை பற்றி பல ஆண்டுகள் மவுனமாக இருந்ததால் தான் தற்போது நம்மீது சர்ச்சையை கிளப்பி விடுகிறார்கள்.
போராட்ட குணம் குறைந்து விட்டது:
காங்கிரஸ் கட்சியை ஒதுக்கிவிட்டு தமிழகத்தில் யாரும் ஆட்சிக்கு வந்துவிட முடியாது. வரும் தேர்தலிலும் இந்த நிலைமை ஏற்படும். போராட்ட குணம் என்பது முதலில் காங்கிரஸ் கட்சிக்குத்தான் வந்தது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்காரர்களின் போராட்ட குணம் என்பது குறைந்துவிட்டது.
தமிழக அரசு அண்மையில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை ஒழுங்கு படுத்துவதற்காக கமிட்டி ஒன்றை அமைத்தது. அந்த கமிட்டி பள்ளியில் 11 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கல்வி கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கூறியுள்ளனர். இதனால் பல பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளமே கொடுக்க முடியாமல், பள்ளிகள் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதை முதல்-அமைச்சர் கருணாநிதி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
வரும் தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என்றார் கார்த்தி.












Click it and Unblock the Notifications